"பிடிபட்டது ரோலக்ஸ் யானை".. பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டம்
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றித் திரிந்து வந்த ரோலக்ஸ் காட்டு யானையை நான்கு கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத் துறையினர் பிடித்தனர். இந்த யானையை பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளில் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி அடிக்கடி கிராம குடியிருப்புகளுக்குள் புகுவதும், விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

குறிப்பாக, நரசிபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வந்தது. இந்த யானை விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த யானை தாக்கி சிலர் உயிரிழந்ததாகவும் புகார் எழுந்தது. பார்க்கவே கம்பீரமாக இருக்கும் இந்த யானையை அப்பகுதி மக்கள் ரோலக்ஸ் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
விவசாய நிலங்கள் சேதம், தொடர்ந்து யனை தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த யானையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வனத் துறையினர் பொள்ளாச்சி, டாப்சிலிப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்கின்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வந்து இருந்தனர்.
வன மருத்துவர்கள் விஜயராகவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார். அப்பொழுது அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் காரணமாக ஆபரேஷன் ரோலக்ஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்தது. இதனால், பாதுகாப்புக் கருதி அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. அவற்றிற்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை கோவைக்கு அழைத்து வந்தனர்.
ஏற்கனவே கபில்தேவ் என்கின்ற கும்கி யானை கோவை அழைத்து வரப்பட்டது. இந்த இரண்டு யானைகள் மூலம் ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற இரண்டு காட்டு யானைகள் கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் என்ற நான்கு கும்கி யானைகள் உதவியுடன் அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ் வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கி மயக்க ஊசி செலுத்தினர்.
இதையடுத்து, கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய நான்கு யானைகள் உதவியுடன் வனத் துறையினர் வாகனத்தில் ரோலக்ஸ் யானையை ஏற்றினர். இந்த யானையை பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்ல வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications