"அம்மா அம்மா நீ எங்க அம்மா".. கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானை.. முதுமலையில் விட முடிவு
கோவை: கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டி யானை தாயைப் பிரிந்து தனியாக பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், வனத் துறையினர் அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த யானையை மற்ற யானைகள் கூட்டத்தில் சேர்க்க மறுத்ததால் முதுமலை, தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மதுக்கரையில் வனத் துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரோந்தப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு ஆண் காட்டு யானைக் குட்டி தாயை பிரிந்த நிலையில் தனியாக தவித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனைக் கண்ட வனத் துறையினர் அந்த குட்டியானையை பாதுகாப்பாக மீட்டனர்.

வனக் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் படி குட்டி யானைக்கு மதுக்கரை வனத்துறையினர் மருத்துவ உதவிகளைச் செய்தனர். தாயைப் பிரிந்த அந்த யானை சோர்வாக இருந்ததால் அதற்கு உணவளித்தனர். இதையடுத்து, வனத்துக்குள் பெண் யானை தனியாக சுற்றுகிறதா என்று வனத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால், பெண் யானை எதுவும் தனியாக நடமாடவில்லை. ஆனால், யானைக் கூட்டங்களில் ஒரு பெண் யானை இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த யானைக் கூட்டத்தில் குட்டி யானையை சேர்க்க வனத் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஐந்து முறை குட்டி யானையை சேர்க்க முயற்சித்த ோதும் குட்டி யானையை மற்ற யானைகள் சேர்த்துக் கொள்ளவில்லை.
பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டி யானையை தனியே விடுவது மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தில் கடும் சிரமத்துக்குள்ளாகும் என்றும், பராமரிப்பது சிரமம் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மேல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அந்த குட்டி யானையை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோவை வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகங்களிலும் வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் வனப் பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் புதிதாக தண்ணீர் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்புகள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துக்கு உள்ளேயே தண்ணீர் கிடைக்க வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினந்தோறும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுக்கரை வனச்சரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை கண்காணிக்க சென்றபோது குட்டி யானை தனியாக நின்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த குட்டியானையை யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மற்ற யானைகள் அதனை சேர்த்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, இந்த யானைக் குட்டியை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications