கோவை ஓட்டலில் ஆர்டர் செய்த பொரித்த கோழியில் ‘லெக்பீஸ்’ இல்லை.. பிரபல ஓட்டலுக்கு 10 ஆயிரம் அபராதம்
கோவை: கோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்பவர், பிரபல பிரியாணி கடையில் ஆர்டர் செய்த முழு பொரித்த கோழியில் 'லெக்பீஸை' காணவில்லை என நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அந்த ஓட்டல் நிர்வாகம், வழக்கை தொடர்ந்த கிரிஸ்டோபர் எடிசனுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பார்ப்போம்.
நடிகர் வடிவேலு நடித்த ஒரு படத்தில் ஒருவர் ஓட்டலில் சிக்கன் சாப்பிட செல்வார். சிக்கன் 65 ஆர்டர் செய்திருப்பார். அதில் ஐந்து சிக்கன் துண்டுகள் இருக்கும். தட்டில் கோழி 5 இருக்கு, மீதம் 60 கோழி எங்கே என்று வடிவேலுவிடம் சாப்பிட வந்தவர் கேட்பார்.. அப்படி ஒரு சம்பவம, அதேநேரம் சீரியஸான சம்பவமாக மாறி உள்ளது. முழு பொறித்த கோழி ஆர்டர் செய்தவருக்கு, லெக் பீஸ் கிடைக்கவில்லை. அவர் ஓட்டல் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்துள்ளார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பிரியாணி கடை
கோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்பவர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஓட்டலில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " கோவை உப்பிலிபாளையம் சாலையில் மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது நான் தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழிக்கு (கிரில் சிக்கன்) ஆர்டர் செய்தேன். அப்போது ஊழியர் கோழி இறைச்சி துண்டுகளை பரிமாறியிருந்தார்.
லெக் பீஸ்
பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் 'லெக்பீஸ்' துண்டு எங்கே? என்று கேட்டேன். ஆனால் ஊழியர்கள் இதற்கு உரிய பதில் அளிக்க இயலவில்லை.. குறைபாட்டை சரி செய்ய கோரியபோது, குடும்பத்தினர் முன்னிலையில் என்னை ஆவேசமாக பேசி மிரட்டினார்கள். இதனால் எனக்கு அங்கு அவமானம் ஏற்பட்டது. வற்புறுத்தியதை தொடர்ந்து ஓட்டல் ஊழியர் சமையலறைக்கு சென்று சில 'லெக்பீஸ்' துண்டுகளை தாமதமாக கொண்டு வந்து கொடுத்திருந்தார்.
முழு கோழிக்கு பணம்
நான் முழு கோழிக்கு பணம் கொடுத்து வாங்கியும் அதில் உள்ள 'லெக்பீஸ்' துண்டுகளை திருடி உள்ளனர். ஓட்டலில் விற்பனைக்காக உள்ள படத்தில் உள்ளவாறு கொடுக்காமல் உறுதிமொழியை மீறி இருக்கிறார்கள். இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். எனவே பில் தொகை ரூ.1,196-ஐ வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் கூறியிருந்தார்.
10 ஆயிரம் அபராதம்
இந்த மனுவை விசாரணை நடத்திய கோவை நுகர்வோர் மன்ற நீதிபதி தங்கவேலு, உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் ஓட்டல் உரிமையாளர், பாதிக்கப்பட்டவரின் மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications