வடமாநிலங்களில் இருந்து வரும் "கஞ்சா சாக்லேட்".. கொரியர் மூலம் கடத்தல்.. கோவை எஸ்பி பத்ரி பேட்டி!
கொரியர் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கோவை எஸ்பி பத்ரி நாராயணன் கூறியுள்ளார்.
கோவை: வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுவதாக கோவை காவல் கண்காணிப்பளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். கஞ்சா புழக்கத்தில் மதம், இனம் தாண்டி பலர் ஈடுபடுவதாக கூறிய அவர், கஞ்சா சாக்லேட்கள் வழக்கமான சாக்லேட் போலவே இருக்கும் என்றும், அதில் 15% கஞ்சா கலந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெருகி வரும் கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

கஞ்சா வேட்டை
போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார். அதற்கு "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்று பெயரிடப்பட்டது. இதன்பேரில் தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீவிர நடவடிக்கை
கஞ்சா வேட்டை 1, கஞ்சா வேட்டை 2.O நடந்து முடிந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.O நடைபெற்றது. கடந்த மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்புள்ள, சுமார் 1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அவர்கள் பயன்படுத்திய 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா மொத்த வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா இல்லா கிராமங்கள்
இந்த நிலையில் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வாகனச் சோதனையில் 7 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து கோவை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறுகையில், கோவை மாவட்டத்தை பொறுத்த வரை 250 கிராமங்கள் கஞ்சா இல்லா கிராமமாக மக்கள் அறிவித்துள்ளனர்.

கஞ்சா சாக்லேட்
அதேபோல் வடமாநிலங்களில் இருந்து கொரியர் மூலம் போதைப்பொருள் அனுப்பப்படுகிறது. கஞ்சா புழக்கத்தில் மதம், இனம் தாண்டி பலர் ஈடுபடுகின்றனர். எனவே வடமாநிலத்தவர் என சொல்ல வேண்டாம். கஞ்சா சாக்லேட்கள் வழக்கமான சாக்லேட் போலவே இருக்கும் அதில் 15 சதவிகிதம் வரை கஞ்சா கலந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications