சூலூரில் அரசு நர்ஸ் மர்ம மரணம்... வரதட்சணைக்காக தூக்கில் தொங்கவிட்ட புகுந்த வீடு
கோவை: வரதட்சணையை ஒழிக்க பல சட்டங்கள் போட்டும் அவ்வப்போது வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் கொல்லப்படுகின்றனர். சூலூரில் நர்ஸ் ஒருவரின் மரணம் பெற்றோர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புகுந்த வீட்டினர் அடித்துக்கொன்று தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மர்மமான முறையில் மரணமடைந்த பெண்ணின் பெயர் பாண்டிமீனா என்பதாகும். இவர் பல்லடம் அரசு மருத்துவக்கல்லூரியில் நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தார். முரளி என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் 4 லட்சம் ரூபாய் பெற்றோரிடம் கேட்டு வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கணவர் வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார் பாண்டி மீனா. கணவர் முரளிதான் பாண்டிமீனாவின் உடலை இறக்கியதாகவும் தெரிகிறது. மகள் மரணமடைந்த செய்தி கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்த பாண்டிமீனாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
பாண்டிமீனாவின் உடலில் பல பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதனையடுத்து இது தற்கொலை அல்ல கொலை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாண்டிமீனாவின் மரண வழக்கு பற்றி விசாரணை மேற்கொண்டனர். பாண்டி மீனாவின் கணவர் மற்றும் மாமனார், மாமியாரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இளம் நர்ஸ் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.