நீட் விவகாரம்: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க ஆளுநருக்கு 1000 காரணம் இருக்கும் - தமிழிசை
கோவை: நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம். ஆளுநர்கள் ஒன்றும் ரப்பம் ஸ்டாம்ப் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அதன் பின்னணியில் 1000 காரணம் இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவிக்கு ஆதரவாக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளதோடு, திமுகவை சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் உள்ளன. சனாதானம், திராவிடம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி அடிக்கடி பேசி வருகிறார். சனாதானத்தை பெருமையாகவும், திராவிடத்தை விமர்சனம் செய்தும் அவர் கூறும் கருத்துகளுக்கு ஆளும் கட்சியான திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலுக்கு நடுவே சமீபத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழகத்துக்கான நீட் விலக்கு குறித்த கேள்விக்கு அளித்த பதிலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் நீட் விலக்கு கோரியும், ஆளுநர் ஆர்என் ரவியின் நீட் தொடர்பான கருத்தை கண்டித்தும் திமுக சார்பில் கடந்த 20ம் தேதி தமிழகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆளுநர் ஆர்என் ரவிக்கு தைரியம் இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடும் படி கூறினார். மேலும் ஆளுநர் குறித்த உதயநிதியின் சில கருத்துகள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன. இந்நிலையில் தான் கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, ஆளுநருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‛‛எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஆளுநரை வேண்டுமென்றே விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தப் பொறுப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஆனால், முதல்வர் விமர்சனம் செய்வதைத்தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஆளுநரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது. முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேச வேண்டும். முதல்வர் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அதோடு ஆளுநர் மீது விமர்சனம் செய்யாதீர்கள் என தனது கட்சியினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும். மேலும் ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. ஓர் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால், அதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக பேசுவது மாணவர்களுக்கு செய்யும் துரோகம். கார்த்தி சிதம்பரம் நீட் தேர்வுக்கு முழு ஆதரவாக உள்ளார். அவரது அம்மாதான் நீதிமன்றத்தில் போராடி நீட் தேர்வை வாங்கிக் கொடுத்தார். உயிரைக் காக்கும் தொழிலை படிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் உயிரை மாய்ப்பது எப்படி சரியாக இருக்கும். உயிரை மாய்ப்பதை இங்கு கொண்டாடுகின்றனர். இது மிகவும் கவலை அளிக்கிறது'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications