வால்பாறையில் அதிகாலையிலேயே நடந்த சோகம்.. யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை: கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள காடம்பாடி பகுதியில் இன்று அதிகாலையில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த யானை தாக்கியதில் பாட்டியும், ஒன்றரை வயது குழந்தையான அவரது பேத்தியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் புகுந்து வருவதால் மனித விலங்கு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வால்பாறை, ஊமாண்டி முடக்கு, வேவர்லி எஸ்டேட் அருகே உள்ள காடம்பாடி பகுதியில் ஒற்றை யானை இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஒரு வீட்டிற்குள் புகுந்துள்ளது.

வீட்டிற்குள் 55 வயது மதிக்கத்தக்க அஞ்சலா என்ற பாட்டியும், ஹேமாஸ்ரீ என்ற ஒன்றை வயது பேத்தியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பாட்டி பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மக்கள் உடனடியாக பலத்த காயமடைந்த அஞ்சலாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வனத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அஞ்சலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையில் தொடர்ந்து வன விலங்குகள் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வனத் துறையினர் உரிய ரோந்துப் பணி மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications