சோனியாவை கூப்பிடலாமா.. அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா.. ஸ்டாலின் மீது எச். ராஜா பாய்ச்சல்
மு.க.ஸ்டாலின் அரசியல் முதிர்ச்சி பெறாதவர் என எச்.ராஜா கூறியுள்ளார்.
கோவை: சோனியா காந்தியை சிலை திறப்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் கூப்பிடலாமா.. அது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா.. என்று எச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசினார். அப்போது, கருணாநிதி சிலை திறப்பு விழா உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் அளித்த பதில்கள்தான் இவை: "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை
100 சதவீதம் மத்திய அரசு உதவியுடன் அமைய போகும் இந்த மருத்துவமனை மூலம் தமிழகத்தில் 100 எம்பிபிஎஸ் இடங்கள், 60 செவிலியர் இடம், ஆயிரம் உள்நோயாளிகள், 750 படுக்கை வசதிகளுடன் வர உள்ளது.
கூப்பிடலாமா?
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் பற்றி பேசியதை மக்கள் யாருமே ரசிக்கவில்லை. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த, மற்றும் 25 ஆயிரம் தமிழ் விதவைகள் உருவாக காரணமான சோனியா காந்தியை இந்த விழாவுக்கு கூப்பிடலாமா? அவரை அழைத்தது பெரிய தவறு.
முதிர்ச்சி இல்லை
கடந்த 2 வருஷமாகவே ஸ்டாலின் உண்மைக்கு மாறாக எதை எதையோ பேசி வருகிறார். அவர் முதிர்ச்சி இல்லாத தலைவராக உள்ளார்." என்று விமர்சித்தார். பின்னர், சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல் பற்றியும், அந்த பாடலில் தங்களை விமர்சனம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
என்னை பற்றி விமர்சனமா?
அதற்கு எச்.ராஜா, "என்னை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. தேச பக்தி, இந்து மதத்துக்கு எதிராக பேசினால் நான் பதில் சொல்வேன். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்" என்றார்.