வெள்ளியங்கிரி கோயிலுக்குள் நுழைந்த யானைக்கு என்னாச்சு.. இறந்தது எப்படி.. உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி கோயிலுக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்து வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த யானை இறந்ததற்கான காரணம் குறித்து தமிழ்நாடு வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் அழகே அதன் குளு குளு காலநிலையும், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையும்தான். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதனால், உணவு, குடிநீர் தேடி வரும் யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக விவசாயத் தோட்டங்கள், வீடுகள் சேதமடைவது, மனித விலங்கு மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மலை அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும்.
இந்நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் அக்டோபர் முதல் வாரத்தில் திடீரென காட்டு யானை ஒன்று நுழைந்தது. கோயிலுக்குள் யானை நுழைந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. பார்க்கவே மிகவும் கம்பீரமாக தோற்றமளித்த அந்த யானை கோயிலுக்குள் நுழைந்த இரண்டு நாட்களில் உயிரிழந்தது.
மிகவும் நன்றாக இருந்த யானை எப்படி இறந்தது என்ற கேள்வி எழுந்து வந்தது. ஆனால், யானை உயிரிழப்புக்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உயிரிழந்த யானையின் உடலுறுப்புகள் தடயவியல் ஆய்வுக்கும் அனுப்பப்படவில்லை. யானை உயிரிழப்பு குறித்தும் தெரியப்படுத்தாமல் பிரேதப் பரிசோதனை செய்து யானை புதைக்கப்பட்டதாக சென்னை கோட்டூர் கார்டன் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களைப் பார்க்கும்போது யானை கோயிலுக்குள் நுழைந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளது. எனவே, யானை இறந்ததற்கான காரணம் குறித்த விவரங்களுடன் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை தமிழக வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications