24 மணி நேரம்.. போலீசின் திக்திக் தேடல்.. கோவை மாணவி மீட்கப்பட்டது எப்படி? அந்த பஸ்ஸில் போனது ஏன்?
கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் 12 வயதே ஆன சிறுமி காணாமல் போன நிலையில் போலீசாரின் சிறப்பான தேடுதல் வேட்டை காரணமாக பத்திரமாக அந்த சிறுமி நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் வசித்து வரும் சுதாகரன்- சசிகலா தம்பதியினரின் மூத்த மகள்தான் நேற்று முதல்நாள் காணாமல் போனார். 12 வயதான ஸ்ரீநிதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில் திடீரென காணாமல் போனார்.
7ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு ஸ்ரீநிதி முதல் வகை நீரிழிவு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மருந்து டோஸ் முறையாக போட வேண்டும்.
ஒருமுறை போடாமல் போனால் கூட அவரின் உடல்நிலை மிக மோசமாகும். அதோடு உணவிலும் முறையாக கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையில்தான் கடந்த 17ம் தேதி பிற்பகல் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டு இருந்த ஸ்ரீநிதி மாயமானார்.
அக்கம் பக்கத்தில் தேடியும்.. எங்கும் ஸ்ரீநிதி கிடைக்கவில்லை.

போலீஸ் புகார்: இதையடுத்து அந்த மாணவியை தேடி போலீசில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதோடு இணையத்திலும் ஸ்ரீநிதி புகைப்படம் வெளியிடப்பட்டு, அவரின் பெற்றோர்கள் நம்பர் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுமியை தேடுவதற்காக கிட்டத்தட்ட தமிழ்நாடே திரண்டு வந்தது. நெட்டிசன்கள் பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து உதவி கேட்டனர்.
சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கூட சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து உதவி கேட்டனர்.
ஒரு பக்கம் சமூக வலைத்தளங்கள் சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தேவையான முயற்சிகளை மக்கள் எடுத்து வந்தனர்.

போலீஸ் திக்திக் : இன்னொரு பக்கம் போலீசார் 6 தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். மாணவி ஶ்ரீநிதியைக் காணவில்லை என்றும் அவரை கண்டுபிடிப்போர் தகவல் அளிக்கலாம் என்று போலீசார் சார்பாக இணையத்தில் போஸ்டர்கள் அனுப்பப்பட்டன.
6 தனிப்படை போலீசார் பின்வரும் பணிகளை பிரித்து செய்தனர்..
2 குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது.
1 குழு சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை செய்தது.
1 குழு சிறுமியின் அக்கம் பக்கத்தினர் உறவினர்களிடம் விசாரணை செய்தது.
1 குழு சிறுமி காணாமல் போன இடத்திலும், பொள்ளாச்சி போன்ற அருகாமை பகுதிகளிலும் கள விசாரணை செய்தது.
1 குழு அந்த சிறுமியின் பள்ளி, கோவை பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களில் விசாரணை செய்தது.
கடந்த 24 மணி நேரத்தில் இவர்கள் பல ஆயிரம் சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்து, பல கிலோ மீட்டர் சல்லடை போட்டு தேடி உள்ளனர்.
@policecbecity@ipspolicetn@R_Sudhakar_Ips@CbeCorp@Cbe_Dist_Police@CollectorCbe@tnpoliceoffl@CMOTamilnadu pic.twitter.com/iBAxezd9k7
— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) May 18, 2023
ஆபரேஷன் : இந்த தீவிர ஆபரேஷனின் பலனாக போலீசாரின் சிறப்பான தேடுதல் வேட்டை காரணமாக பத்திரமாக அந்த சிறுமி நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
சிசிடிவி காட்சி அடிப்படையில் அந்த சிறுமி பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (17.05.2023) ஸ்ரீநிதி என்கிற 12 வயதுடைய சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று (18.05.2028) இரவு 8 மணிக்கு பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மேலும் இச்சிறுமி பாதுகாப்பான முறையில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்காக உதவிய அனைவருக்கும் கோவை மாநகர காவல்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், என்று கூறி உள்ளனர்.
பெற்றோர்கள் திட்டியதால் அந்த சிறுமி இப்படி காணாமல் போனதாக கூறினாலும் போலீசார் இது தொடர்பாக தொடர் விசாரணை செய்து வருகின்றனர். முக்கியமாக அவர் ஒண்டிப்புதூரில் இருந்து 8A பேருந்தில் ஏறியதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் உள்ளதால், அவர் எங்கே செல்ல திட்டமிட்டு இருந்தார்.. உண்மையில் அவருக்கு என்னதான் பிரச்சனை என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications