தொண்டாமுத்தூரில் போலி வாக்காளர்கள்.. வட மாநிலத்தவருக்கு எப்படி வாக்குரிமை? திமுக வேட்பாளர் புகார்
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அனைவராலும் கவனிக்கப்படக்கூடிய முக்கிய தொகுதிகளில் ஒன்றாக தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளது.
இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல திமுக சார்பில் திமுக சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார். இருவரும் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திடமும் மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளார்,
இது குறித்து கார்த்திகேய சிவசேனாபதி தனது ட்விட்டரில், "தொண்டாமுத்தூர் தொகுதியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரம் ஈசானா விஹார் மற்றும் பாரதியார் வீதி பகுதிகளில் வெளி மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வார்டு எண் 5ல் வசிக்கும் அவர்கள் வாக்குரிமை பெறும் அளவிற்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் அல்ல.
கிட்டத்தட்ட ஒரே வளாகத்திற்குள் 700 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். 50க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் முகவரி ஒரே முகவரியாக உள்ளது. எவ்வாறு அந்த குறிப்பிட்ட வீடுகளில் 50லிருந்து 100க்கும் மேற்பட்டோர் வசிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அமைச்சர் வேலுமணியின் தலையீட்டில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications