மனைவி திட்டியதால் வீட்டைவிட்டு சென்ற ரோஷக்கார கணவர்.. காரணம் கேட்டா அதிர்ந்து போயிருவீங்க
கோவை: வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்று மனைவி திட்டியதால் அவரது கணவர் வீட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோபித்துக் கொண்டு சென்ற தனது கணவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.
கணவன், மனைவி பிரச்னை என்பது காலம் காலமாக நடைபெற்று வருவதுதான். சண்டையில்லாத குடும்பத்தை யாராலும் பார்த்திருக்க முடியாது. கணவன், மனைவிக்குள் பிரச்னை வருவதும், திரும்ப சேருவதும் இயல்புதான். பணப் பிரச்னை, மது அருந்துவதால் பிரச்னை, குடும்பப் பிரச்னை, உறவினர்களுக்குள் பிரச்னைனு பல சம்பவங்களை பார்த்திருப்போம். ஆனால், கோவையில் ஒரு தம்பதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை வேற ரகம்.

மனைவி ஊருக்கு சென்றுவிட்டாலே கணவர்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த வகையில், பிரபல காமெடியான ஜனகராஜின் என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற நகைச்சுவை இன்றளவும் பொதுமக்கள் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கோவையில் மனைவி ஒருவர் ஊருக்குச் சென்றுவிட்டு திரும்ப வந்த நிலையில் வீடு குப்பைக் கூளமாக காட்சியளித்துள்ளது.
இதையடுத்து, கணவரை வீட்டை ஏன் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்று மனைவி கேட்ட நிலையில் கணவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த மனைவி கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி திருத்தணியைச் சேர்ந்த அனுசியா. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பணியாற்றி வந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் வேறுவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, இருவரும் தங்களது குடும்பத்தாரிடம் பேசி பின்னர் இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியில் இத்தம்பதி குடியேறினர். பின்னர், சக்தி சாலையில் உள்ள சங்கரா மருத்துவமனையில் மகேஷ் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், அனுசியா திருத்தணியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவர் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உணவுப் பொருட்கள் அதிக அளவில் வீணடித்து கிடந்தது கண்டு ஆத்திரம் அடைந்த அனுசியா, மகேசை திட்டியுள்ளார்.
இதில் கோபமடைந்தவர் மகேஷ் கடந்த மாதம் 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுவரை அவர் வீடு திரும்பவில்லையாம். இதனால், தனது கணவரை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்று மனைவி திட்டியதால் கோபித்துக் கொண்டு காதல் கணவன் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications