புதுசா ட்ரை பண்ணும் அண்ணாமலை.. எதிர் வேட்பாளர்கள் பெயரே சொல்லாமல் பிரச்சாரம்.. 1 ரூபாயும் கிடையாதாம்
கோவை: கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "ஒரு ரூபாய் தர மாட்டேன்.. எதிர் வேட்பாளர் பெயரை கூட சொல்லமாட்டேன்" எனக் கூறியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று டெல்லியில் இருந்து கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடி உத்தரவிட்டதால் தான் கோவை தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறினார்.

அண்ணாமலை பேசுகையில், "கோவை நாடாளுமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்துக்கும், மறுபுறம் தர்மத்துக்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும். நாங்கள் தயார். தமிழகத்தின் அரசின் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க வேண்டும்.
கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல, இன்டர்நேஷனல் மேப்பில் பதிய வைக்கப் போகிறோம். தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியல் எனக்கு பிடிக்காது. அங்கு போக விரும்பவில்லை. மோடி உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன். 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்போது எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கிறது என்பதை காட்ட வேண்டும்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது 2026ஆம் ஆண்டு இங்கு பாஜக ஆட்சிக்கு வருவதற்காகதான். திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026-ம் ஆண்டு பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். டாய்லட் பேப்பர் இல்லை என்றால், திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள்.
எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரசாரத்தின்போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன். அறிவாலயத்தோடு, கோபாலபுரத்தோடு தான் என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது. கோவைக்கு எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான கோடி கொட்டுவார்கள். நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கிறோம்.
பாஜக ஒரு தேர்தல் விதிமீறலில் கூட ஈடுபடாது. தமிழ்நாட்டிலேயே தேர்தலில் குறைவாக தேர்தல் செலவு செய்யும் வேட்பாளராக நான் இருப்பேன். பிற கட்சிகளில் வலை வீசி வேட்பாளர்களை தேடுகின்றனர். இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றுவார்கள். நான் மக்களை நம்பி களம் இறங்குகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications