'பிஎச்டி படிக்க ஜப்பானுக்கு ஃபிளைட் ஏறியிருக்க மாட்டேன்'.. அண்ணாமலைக்கு நெட்டிசன் கடும் பதிலடி
கோவை: இடஒதுக்கீடு சிஸ்டத்தில் வரவில்லை என்றும் ரெண்டே ரெண்டு தகர பெட்டியோடு வந்ததாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஜப்பானில் வாழும் முனைவர் கணேசன் என்பவர் பதிலடி கொடுத்துள்ளார்..
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார்.

பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில்," அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவரின் அப்பா சம்பாதித்து வைத்த பணத்தை மட்டுமே வைத்து அரசியலுக்கு வந்துள்ளார்.அவருக்கு இந்த மண்ணில் எப்போதும் இடம் இல்லை. அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தந்தையின் எம்.எல்.ஏ கோட்டாவை பயன்படுத்தி வந்துள்ளார்.
நான் அவரைப் போல கோட்டா சிஸ்டத்தில் வரவில்லை. அண்ணாமலை கோவையில் என்ன செய்கிறார் என்பதுதான் அனைவரின் பேச்சாக இருக்கிறது" என்றார். அதாவத தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறியிருந்தார்.
இதற்கு கோவை தொகுதியின் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அண்ணாமலை மன்னிப்புகேட்க வேண்டும் என்றும் கோரினார். இதுபற்றி அவர் கூறுகையில், எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது. தவறான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கோர வேண்டும். எனக்கு அப்போது 11 வயது தான். நான் எப்படி கோட்டாவில் சீட் பெற்றிருக்க முடியும்.. நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி உள்ளார்.

அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன். அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி தான் செய்தோம். காரை விற்று அந்த கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம்.
இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனையில் உள்ளனர். 39 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நான் உட்பட என்னுடன் இருக்கும் 10 பேர் அரசியலை விட்டு விலகுவோம்" இவ்வாறு சிங்கை ராமச்சந்திரன் பதிலடி கொடுத்தார்.
இதனிடையே இடஒதுக்கீடு சிஸ்டத்தில் தான் வரவில்லை என்று கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் ஓபிசி கோட்டாவில் தான் ஐபிஎஸ் ஆனார் என்பதை குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.. குறிப்பாக திமு ஆதரவாளர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..
இந்நிலையில் ஜப்பானில் வசித்து வரும் முனைவர் கணேசன் என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "திருவண்ணாமலையில ஒரு கிராமத்துல ஒன்னரை ஏக்கர் நிலத்தை மட்டும் நம்பி காலத்த ஓட்டின குடும்பத்துல பொறந்து பள்ளிக்கு போன முதல் நபர் நான்.

+2 ல 82% மதிப்பெண். எனக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, சொந்த மாவட்ட மாணவர்களுக்கு கட் ஆஃப்ல 10 மதிப்பெண் சேர்த்துக் கொடுத்து திருவண்ணாமலை அரசுக் கலைக்கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிக்க வழி வகுத்தவர் கலைஞர். அதோடு முதல் தலைமுறை பட்டதாரித் திட்டத்தில் கல்லூரி கட்டணத்தை முழுதும் நீக்கி ரூ 370 கையில கொடுத்தார். இதை தேர்வுக்கட்டணம் செலுத்த பயன்படுத்திக்கொண்டோம்.
இப்படியான இட ஒதுக்கீடும் சலுகைகளும் கிடைக்கலைனா பிஎச்டி படிக்க ஜப்பானுக்கு ஃபிளைட் ஏறியிருக்க மாட்டேன். +2 முடிச்ச கையோட ஜெராக்ஸ் கடையிலயோ, பூக்கடையிலயோ வேலை பார்த்துட்டு அந்த ஒன்னரை ஏக்கர் நிலத்தோட வாழ்க்கை முடிஞ்சிருக்கும்.
இங்க கம்பெனில வேலைக்கு சேர்ந்த 3-வது வாரத்துல கொடுத்த முதல் யோசனையில் நிலைத்தன்மையற்று இருந்த ஒரு வினையூக்கி 10 மடங்கு கூடுதல் நிலைத்தன்மைப்பெற்று அமெரிக்காவின் ஒரு புகழ்பெற்ற கம்பெனிக்கு தொடர்ந்து சப்ளை போகுது. இட ஒதுக்கீட்டில் படித்த எங்களின் திறமையை கேள்வி கேட்கும் அருகதை யாருக்கும் கிடையாது." என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications