கோவையில் அண்ணாமலை தோற்றால் நிறுவனத்தையே கலைப்பேன்.. சவால் விட்டவருக்கு தர்ம சங்கடம்
கோவை: கோவையில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை என்றால் நிறுவனத்தை கலைத்துவிடுவதாக IPDS நிறுவனத்தின் தலைவர் திருநாவுக்கரசு கூறியிருந்தார்.இந்நிலையில் அண்ணாமலை கோவையில் தோற்ற நிலையில், நிறுவனத்தை எப்போது கலைப்பீர்கள் என சமூக வலைதளங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கோவையில் தனி வார் ரூம், கோவைக்கு என்று தனியாக தேர்தல் அறிக்கை, மத்தியில் ஆளும் கட்சி என்ற பலம், கொங்கு பகுதியில் உள்ள செல்வாக்கு என மிகப்பெரிய பலத்துடன் களம் இறங்கினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை லோக்சபா தொகுதியல் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமாரும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணியும் என மொத்தம் 37 பேர் போட்டியிட்டார்கள். இதன் வாக்கு எண்ணும் பணி நேற்று நடந்தது. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் ஓட்டு எண்ணப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதல் சுற்று வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்தது. இதில் தொடக்கம் முதலே தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்தார். அடுத்தடுத்து எண்ணப்பட்ட ஒவ்வொரு சுற்றிலும் தி.மு.க. வேட்பாளர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஓட்டுகள் வரை தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணும் மையத்திற்கு தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் நேரடியாக வந்த நிலையில் அண்ணாமலை வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 24-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 82,273 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அண்ணாமலையை 1 லட்சத்து 17 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து கோவையில் பல்வேறு இடங்களில் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சிலர் மட்டன் பிரியாணி அளித்தும் மகிழ்ந்தனர்.
இதனிடையே வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கோவையில் அண்ணாமலை வெற்றி பெறவில்லை என்றால் நிறுவனத்தை கலைத்துவிடுவதாக IPDS நிறுவனத்தின் தலைவர் திருநாவுக்கரசு கூறியிருந்தார். இதுபற்றி அவர் கூறும் போது, கோவை தொகுதியில் பாஜக வெற்றிபெறும். மக்கள் எல்லாம் ஆர்வமாக உள்ளார்கள்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலிடத்தில் இருக்கிறார்.. 38.9 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இன்றைக்கு நிச்சயமாக சொல்கிறேன்.. என்னுடைய ஆய்வு தோற்றால், என்னுடைய நிறுவனத்தையே கலைசிட்டு போறேன்.. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த ஆய்வு நிச்சயமாக வெற்றி பெறும் . இல்லாவிட்டால் ஐபிடிஎஸ் நிறுவனத்தையே கலைத்துவிட்டு செல்கிறேன். மக்கள் எங்களிடம் இது கடைசி வாய்ப்பு எங்களுக்கு.. அண்ணாமலை தோற்றால் மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்கள்" இவ்வாறு திருநாவுக்கரசு கூறியிருந்தார். இந்நிலையில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காரணத்தால், திருநாவுக்கரசுவிடம் எப்போது நிறுவனத்தை கலைப்பீர்கள் என்று திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications