ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு: சீமான் திடீர் அறிவிப்பு
கோவை: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி போட்டியிடும் போது எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் திமுகவை ஆதரித்து அத்தொகுதியில் போட்டியிடாமல் விலக தயார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அறிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குதான் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்கியது. தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்து போட்டியிட்டது. அது விதிவிலக்காக அமைந்துவிட்டது.

ராமநாதபுரம் திமுக ஆதரவு: இப்போதும் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் போது திமுக தமது உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. பிரதமர் மோடியை எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
பங்காளி சண்டை: திமுக, அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளி சண்டை. இதில் தலையிட பாஜக யார்? நீங்கள் நாட்டை ஏற்கனவே பிச்சைக்கார நாடாக வைத்திருக்கிறீர்கள். இனி தமிழ்நாட்டையும் அப்படி மாற்றப் போகிறீர்களா? உங்களுக்கு இங்க என்ன வேலை இருக்கிறது?
பாஜகவின் வெறுப்பு அரசியல்: பாஜக வெறுப்பு அரசியலை பேசுகிறது. எப்போதும் இஸ்லாமியர், கிறிஸ்தவரை மட்டுமே எதிர்த்து பேசுவது என்பது விருப்ப அரசியலா என்ன? வெறுப்பு அரசியல்தானே. நான் வெறுப்பு அரசியலை பேசுகிறவன் அல்ல. தேசிய இனத்தின் உரிமைக்காக, தெளிவான புரிதலோடு நிற்கிறவன். ஒரு தேசிய இனம், தன் விடுதலைக்கு போராடுகிற போது, உரிமைக்கு போராடுகிறபோது, அதே நிலத்தில் வாழுகிற, பிற மொழி வழி தேசிய இனங்களை, பகையினங்களாக மாற்றிக்கொண்டு, வெல்ல முடியாதுங்கிற கோட்பாட்டை பிரபாகரன் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக எத்தனை சீட் தருகிறது? அதுதான் உங்களோட விருப்ப அரசியல்? நான் எல்லோருக்கும் சீட் கொடுப்பது வெறுப்பு அரசியல் அப்படியா? . இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications