இலக்கியவாதிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு.. தமிழ்நாடு அரசின் பணியே அதுதான்.. அன்பில் மகேஷ் பேச்சு!
நெல்லை, கோவையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கோவை: இலக்கியப் படைப்பாளிகளை கண்டறிந்து பெருமை சேர்ப்பதோடு, அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் நெல்லை, கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மாநில பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் சிறுவாணி இலக்கிய திருவிழா கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் எழுத்தாளர்கள் பலர் பங்கேற்று இலக்கியம் சார்ந்து பேசினர்.
அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நிறைவு விழா பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.

அன்பில் மகேஷ் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், இரண்டு நாள் இலக்கிய விழா எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் பிற துறைகளை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது போல, தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம் தான் தாய் மொழியை பாதுகாக்க முடியும்.

கொங்கு பகுதி இலக்கியம்
நெல்லை, கோவையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது சுவையான நீர் சிறுவாணி என்பது போல், இப்பகுதியைச் சேர்ந்த மக்களும் இனிமையானவர்கள். இந்தப் பகுதி எப்படி வணிகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றதோ, அதேபோல் இலக்கியத்திற்கும் புகழ்பெற்ற பகுதியாக இந்த கொங்கு பகுதி உள்ளது. இங்கிருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள் உருவாகியுள்ளனர்.

இலக்கிய படைப்பாளிகள்
இங்குதான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆண்டுதோறும் இதுபோன்ற இலக்கிய திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விருப்பப்படுகிறார். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். இலக்கிய படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, அவர்களது வாழ்வை முன்னேற்றும் வகையிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ் சமூக வளர்ச்சி
இதுபோன்று இலக்கிய திருவிழாக்களின் மூலம் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பெருமை சேர்ப்பது மிக முக்கியமான அம்சமாகும். இலக்கிய படைப்பாளிகள் அவர்களுக்காக மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் அவர்களது இலக்கியப் பணிகளை தொய்வின்றி தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications