காலேஜில் நடப்பது இப்போது பள்ளியிலும்.. கோவையை அதிரவைத்த மாணவர்கள்
கோவை: கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை காலில் விழச் சொல்லி ராகிங் செய்த நிலையில், அதனைத் தட்டிக்கேட்ட மாணவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கல்லூரிகளில் ராகிங் நடப்பது வழக்கம். சீனியர் மாணவர்கள் புதிதாக வரும் முதலாமாண்டு மாணவர்களை சிறு சிறு விஷயங்களைச் செய்ய சொல்லி ராகிங் செய்வார்கள். இந்த ராகிங் செயல்களால் சில நேரங்களில் விபரீத சம்பவங்களும் நேரிடும். இதனைத் தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு கல்லூரிகளிலும் ராகிங் கமிட்டி அமைக்கப்பட்டு, மாணவர்களுக்குத் தொந்தரவு அளித்தால் புகார் அளிக்கும் வகையில் புகார் பெட்டியும் அமைக்கப்பட்டிருக்கும், இதனை கண்காணிக்க தனிக் குழுக்களே செயல்பட்டு வருகின்றன. பொதுவாக ராகிங் என்றாலே கல்லூரிகளில் தான் நடக்கும் என்ற நிலை இருந்தது.
ஆனால், இப்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. பள்ளி மாணவர்களே தொடர் தாக்குதல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் மற்றொரு மாணவரை காலில் விழச் சொல்லி ராகிங் செய்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் ஸ்டேன்ஸ் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்று மாலை பள்ளி முடியும்போது அப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர், 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை தனது காலில் விழ வைத்து ராகிங் செய்து கொண்டிருந்துள்ளார். அந்த மாணவரும் காலில் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் ஏன் காலில் விழச் சொல்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். மேலும், பிளஸ் 1 மாணவரின் இந்த செயல் குறித்து ஆசிரியர்களிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர்கள் அந்த பிளஸ் 1 மாணவரை அழைத்து வரக் கூறி உள்ளார்கள். 6 ஆம் வகுப்பு மாணவரும் பிளஸ் 1 மாணவரிடம் சென்று உங்களை ஆசிரியர்கள் அழைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த பிளஸ் 1 மாணவர் நீ எப்படி ஆசிரியர்களிடம் சென்று கூறலாம்? என்று கேட்டு அந்த மாணவனின் கழுத்தைப் பிடித்து தூக்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவரின் தலையைப் பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் ஓங்கி அடித்துள்ளார். மேலும், டிபன் பாக்ஸாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ஆறாம் வகுப்பு மாணவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கல்லூரிகளில் ராகிங் நடந்து வந்த நிலையில் தற்போது கோவையில் ஸ்டேன்ஸ் பள்ளியிலேயே 6 ம் வகுப்பு படிக்கும் மாணவரை பிளஸ் 1 மாணவர் காலில் விழ சொல்லி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications