இது அடமழை. இது கனமழை.. இது சூறாவளி மழை.. தமிழகத்தின் பல இடங்களை குளிர்வித்த மழை
கோவை: கோவை, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் வெயில் தணிந்து பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரள சேட்டன்களை தென்மேற்கு பருவமழை இனி குளிர வைக்க போகிறது என்றால் தமிழக மக்களை வெப்பச்சலனத்தால் உருவாகும் மழை குளிரவைத்து வருகிறது. ஒரு பக்கம் வெயில் அடித்தாலும், மறுபக்கம் மழையும் பரவலாக பெய்கிறது. தமிழகத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
கோவையில் உள்ள காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ராமநாதபுரம், ஆட்சியர் அலுவலகம், உள்பட கோவையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது,
தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நேற்று இரவு நல்ல மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அப்பாடா.. ஒரு வழியாக, நாளை மறுநாள் ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவமழை!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், மழை நீரில் வேன் ஒன்று சிக்கி, நீண்ட நேரத்த்துக்கு பின் மீட்கப்பட்டது. சிலம்பக்கவுண்டனூரிலுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கியிருந்த தண்ணீரில் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிவந்த வேன் சிக்கியதும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்ட்டனர்.
இதேபோல் சிவகங்கை, அரியலூர், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதனால் வெயில் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.