இன்ஸ்டாகிராமில் பழகி ஐடி பெண்ணுக்கு வலை.. 3 1/2 லட்சம் பணம், நகை மோசடி.. தகாத வார்த்தை
கோவை: கோவை மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி ஐடி ஊழியரிடம் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் எட்டரை பவுன் நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அந்தப பெண்ணை தகாத வார்த்தைகளாலும் பேசிய இளைஞரை கோவை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைதளங்கள் மூலமாக மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முன் பின் தெரியாத நபர்களிடம் பழகும்போது தங்களது சுய விவரங்கள் குறித்து பகிரக் கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், நண்பர்களாகப் பழகி பின்னர் காதல் வலை விரித்து மோசடி செய்யும் சம்பவங்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி ஐடி ஊழியரிடம் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் எட்டரை பவுன் நகையை மோசடி செய்ததோடு மட்டுமல்லாமல், தகாத வார்த்தைகளால் பேசிய இளைஞரை கோவை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர், டைடல் பார்க்கில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பாக்ய அருண் (29) என்பவர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாகப் பழகி வந்த பாக்ய அருண், ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, அருணை நம்பி அந்த இளம்பெண்ணும் பழகி வந்துள்ளார். அருண் தான் சுயதொழில் செய்து வருவதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார். பின்னர், தனது சுய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவ்வப்போது பணம் பெற்று வந்துள்ளார். இளம்பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக பணம், நகை என ஒட்டுமொத்தமாக எட்டரை சவரன் நகை மற்றும் மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை அந்த இளம்பெண் பாக்ய அருணிடம் கொடுத்துள்ளார்.
பணம் பெறும் வரை பெற்றுவிட்டு ஒருகட்டத்தில் அப்பெண்ணிடம் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளார் பாக்ய அருண். சில நாட்களுக்குப் பிறகு பாக்கிய அருண் ஒருகட்டத்தில் இளம் பெண்ணுடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், தன்னிடம் பெற்ற நகை மற்றும் பணத்தை அந்த இளம்பெண் அருணிடம் திருப்பி கேட்டுள்ளார்.
அப்போது, பாக்கிய அருண் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியும், பணம் நகையைக் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பீளமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாக்கிய அருணை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications