சொந்த சாதியில் திருமணம் செய்வேன்.. பெண்களிடம் சத்தியம் வாங்கிய கேகேசி பாலுவுக்கு கலைமாமணி.. சர்ச்சை!
கோவை: வள்ளிக் கும்மி ஆட்டத்தின் போது தனது சாதி பெண்களிடம் சொந்த சாதியில் திருமணம் செய்வேன் என்று சத்தியம் பெற்ற கேகேசி பாலு என்பவருக்கு தமிழக அரசு சார்பாக கலைமாமணி விருது அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கேகேசி பாலுவுக்கு நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட போது, சோசியல் மீடியாவில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவர் நீக்கப்பட்டார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலமாக பல்வேறு கலைப் பிரிவுகளை சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் அளிக்கப்படும்.

அந்த வகையில் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படும் வள்ளிக் கும்மி ஆட்டத்தை தொடர்ந்து பிரபலப்படுத்தி வரும் கேகேசி பாலுவுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வள்ளிக் கும்மி என்ற பாரம்பரிய கலையில் பல்வேறு சாதனைகளை படைக்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார்.
ஆனால் வள்ளிக் கும்மி ஆட்டத்தின் போது இளம் பெண்கள், இளைஞர்களிடம் வேறு சாதியைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், சொந்த சமூகத்திலேயே திருமணம் செய்து கொள்வேன் என்றும் சத்தியம் பெற்று வந்தார். இந்த சம்பவம் பல்வேறு முறை சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சாதிப் பற்றுடன் செயல்பட்ட கேகேசி பாலுவுக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.
இதனால் பகுத்தறிவாளர்கள் பலரும் கேகேசி பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தேசியப் பொருளாளராக கேகேசி பாலு செயல்பட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் கேகேசி பாலுக்கு நாமக்கல் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் சோசியல் மீடியாவில் எழுந்த கடுமையாக கண்டனம் காரணமாக கேகேசி பாலு மாற்றப்பட்டு மாதேஸ்வரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கேகேசி பாலு பேசுகையில், எந்த சாதியிலேயேயும் நல்ல பசங்க இருக்காங்க.. இந்த சத்தியத்தை நான் பொதுவான இடங்களில் பெண்கள் கிட்ட வாங்குவது இல்லை.. எங்களுக்குனு நடக்கும் நிகழ்ச்சியின் போதுதான் வாங்குகிறேன்.
சொந்த சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். இதுவும் சர்ச்சையாகியது. இந்த நிலையில் கேகேசி பாலுவுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதுதொடர்பாக கொமதேக கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், கலைமாமணி விருது கலைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அழிந்து கொண்டிருந்த கலையை மீட்டெடுத்து, அந்தந்த பகுதிகளில் இப்போது பலரும் பயிற்சி எடுத்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். வள்ளிக் கும்மி ஆட்டத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அதனால் வெறுப்பு கருத்துக்களை சொல்வது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications