களைகட்டிய மருதமலை.. கங்கணம் கட்டி விரதத்தை தொடங்கிய முருக பக்தர்கள்.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கோவை: கோவை மாவட்டம், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் மருதமலையில் குவிந்து கங்கணம் கட்டி கந்த சஷ்டி விரதத்தை தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும்.
பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான் என பல பெயர்களால் போற்றப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் சூரசம்ஹார திருக்கல்யாணத்துக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கி வருகிற 8 ம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் சூரசம்ஹார திருக்கல்யாண விழா தொடங்கியது.
விழாவில், பதினாறு வகையான வாசனை திரவியங்களால் மருதமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கங்கணம் கட்டிக் கொண்டனர். இவர்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் இருந்து சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள நவம்பர் 8 ஆம் தேதி தங்களது விரதத்தை முடித்துக் கொள்ளவுள்ளனர்.
கந்த சஷ்டி விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சுவாமிக்கு சண்முகார்ச்சனை, சிறப்பு அபிஷேகம், யாக சாலை பூஜை, விநாயகர் பூஜை ஆகியன செய்யப்பட்டன. கற்ப விருட்ச வாகனத்தில், போருக்கு முன்னதாகச் செல்கின்ற வீரபாகு உடன் சுவாமி வீதி உலா வந்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். விடுமுறை தினம் என்பதால் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நவம்பர் 8 ம் தேதி சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. நவம்பர் 2 முதல் 8 ஆம் தேதி வரை யாகசாலை பூஜை, சுவாமி திருவீதி உலா, அபிஷேக பூஜை நடைபெறவுள்ளது.
அதேபோல, நவம்பர் 7 ஆம் தேதி வேல் வாங்குதல், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல், அன்னையிடம் வேல் வாங்குதல், உற்சவரிடம் சண்முகார்ச்சனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. நவம்பர் 8 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் மற்றும் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறவுள்ளது.
கந்தசஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண விழாவையொட்டி நவம்பர் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் மலையில் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications