கேரளா ஸ்டோரி படம்! மதக்கலவரத்தை தூண்ட சதி! தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பகீர் தகவல்!
கோவை: கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமுமுக கோவை மாவட்ட தலைவர் சர்புதீன் தெரிவித்துள்ளார்.
மத மோதலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திரைப்படம் திட்டமிட்டு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்து, கிறிஸ்துவர்கள் என மாற்று மத சகோதரர்களுடன் இஸ்லாமியர்கள் பழகுவதற்கும், கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கும் ஆயிரம் முரண்பாடுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முஸ்லீம்களை தவறாக சித்தரிக்கும் நோக்கில் தற்போது நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதாக வேதனைத் தெரிவித்த கோவை மாவட்ட தமுமுக நிர்வாகி சர்புதீன், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற படங்களுக்கு அரசு துணை நிற்பது வேதனையாக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
கேரளா ஸ்டோரி போன்ற படங்களை எதிர்த்து போராடினால் தங்களை தேசத் துரோகிகள் என்கிறார்கள் என்றும் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் மட்டும் ஏன் தடை செய்யப்பட்டது எனவும் அவர் வினவினார்.
கேரளா ஸ்டோரி திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தயாரித்தவர் குஜராத்தி என்பதால், அவருடைய பின்னணி பற்றி விசாரிக்க வேண்டும் என்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற படைப்புகள் வெளியிடப்படுவதாக சந்தேகம் கிளப்பினார்.
தமுமுகவின் அரசியல் பிரிவான மமக, கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என 2 நாட்களுக்கு முன்னரே அரசை வலியுறுத்தி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications