காந்திபுரம் பேருந்து நிலையத்தில் குத்தாட்டம்.. கேரளா யூடியூபரை டரியலாக்கிய கோவை போலீஸ்
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் யூடியூபர் ஒருவர் மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடனமாடி அட்டகாசம் செய்தார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூடியிருந்த பகுதியில் சினிமா பாடலுக்கு நடனமாடி, பெண்களின் அனுமதியின்றி வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து கேரள யூடியூபருக்கு கோவை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் ஊடகங்களின் எண்ணிக்கையை விட யூடியூபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிலர் கண்ணியமாக நடந்தாலும் பலர் சமூக பொறுப்புணர்வு இல்லாமல் உள்ளனர். வியூஸ் அதிகரித்து வைரலாகி பிரபலமாவதற்காக பல பல வித்தைகளை கையாண்டு வருகிறார்கள். வியூஸ் வெறியில் பொது இடங்களில் அநாகரீமாக நடந்து கொள்கிறார்கள்.

யூடியூபர் அட்டகாசம்
கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் யூடியூபர் ஜித்து சாஜி. இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தன் நண்பர்கள் சிலருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்திருந்தார். பரபரப்பான நேரத்தில் காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளனர்.
பொதுமக்கள் முன்னிலையில் தமிழ் பாடல் ஒன்றுக்கு பேருந்து நிலையம் முழுவதும் ஓடி ஓடி நடனமாடினார்கள். இதில் ஒரு இளைஞர் சேலை உடுத்தி பெண் வேடமணிந்து நடனமாடினார்கள். இதைப் பார்த்து பொது மக்கள் முகம் சுளித்தனர். இதனை வீடியோவாக பதிவு செய்து அதனை ரீல்ஸ் ஆக தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பொது மக்கள் புகார்
அப்போது அனுமதி இல்லாமல் பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களை வீடியோ எடுத்து முகத்தை மறைக்காமல் அப்படியே வெளியிட்டனர். இந்த செயலுக்கு எதிர்ப்புகள் எழுந்தது. இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அனுமதியின்றி சட்ட விரோதமாக பெண்களை வீடியோ எடுத்து ரீல்ஸ் ஆக வெளியிட்டதாக புகார் எழுந்தது.
பொதுமக்கள் கூடும் ஒரு முக்கியமான பொது இடத்தில், கோவை காவல்துறையினர் இந்த செயலை எப்படி அனுமதிக்கிறார்கள். ஏதாவது விபரீதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது. அந்த வீடியோவை நீக்கி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை நீதியை நிலை நாட்டுவார்களா. சட்டம் எல்லாம் சாமானிய மக்களுக்கு மட்டும் தானா.
காவல்துறை சம்மன்
இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்காவிடின், அது தவறான முன் உதாரணமாகிவிடும். இதேபோல பலரும் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வார்கள் என பொது மக்கள் கூறியிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் காவல்துறையினர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து காட்டூர் காவல்துறையினர் கூறுகையில், "காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடனமாடும் வீடியோ கேரளாவை சேர்ந்த ஜிஸ், மோன் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இவர்கள் இதேபோல, கேரளாவில் பொது இடங்களில் நடனமாடி மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பியுள்ளோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications