கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்!
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் சிபிசி கார்டனில், காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையைச் சேர்ந்த இளம்பெண், கல்லூரியில் படித்தபோது சென்னையை சேர்ந்த கார்த்திக்(எ) மாரியப்பன் என்ற இளைஞருடன் பழகியதாக கூறப்படுகிறது. பின்னர் கார்த்திக் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக, அவர் தொடர்ந்து இளம்பெண்னை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் மற்றும் பல்சர் ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து, மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்த தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரியும் இளம்பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

இதில் ஒரு பாட்டில் வெடித்து வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து எரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொண்டாமுத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications