இஷ்டத்துக்கு பேசுவாரா.. விஜய் குறித்த கேள்வியால் சட்டென டென்ஷனான கொமதேக ஈஸ்வரன்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கூட்டணி ஆட்சி குரல் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணியை விஜய் கல்லாபெட்டி கூட்டணி என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கொமதேக ஈஸ்வரன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் கொமதேக தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக தொகுதி பேச்சு வார்த்தைக்காக நாளை அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக நாளை சென்னை செல்கிறோம். கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் தொகுதிகள் குறையும் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று எனக்கு தெரியவில்லை [KMDK Eswaran].

நிலையான அரசாங்கம்
எவ்வளவு தொகுதிகள் கேட்போம் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டு, திமுகவிடம் பேசிவிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். தமிழகத்தில் நிலையான ஆட்சி முக்கியம். அது இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது. அதனை அந்தந்த சூழல்தான் முடிவு செய்யும். தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி இருக்கும்போது நிலையாக இருக்கலாம்.
மாநிலத்தின் வளர்ச்சி என்பது தான் முக்கியம். மற்ற எண்ணங்கள் தான் இருக்கக் கூடாது. புதிய கட்சிகள் வருவதால் கூட்டணி ஆட்சி என்பது தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அனைவரையும் பங்காளிகள் ஆக்கிக் கொள்வேன் என்பதால் தற்போது இது அதிகமாக பேசப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை கொடுப்பார்கள். அப்படித்தான் அதிமுக பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கிறது.
விஜய் குறித்த கேள்வி
திமுக ஆட்சியால் மக்கள் எந்த அளவு பயனடைந்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதே வழியில் எதையாவது அறிவிக்க வேண்டும் என்பதற்காக அறிவிக்கிறார்கள். இப்போது கூட எங்கள் திமுக அரசு சார்பில் ரூ.5,000 மகளிருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக தெரிவிக்கவில்லை. கடந்த தேர்தலில் கூறியதை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
எனவே எங்கள் கூட்டணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. சிலர் எங்களை கல்லாப்பெட்டி கட்சி என்று விமர்சிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைவரும் இதுபோன்று பேசுவது இயல்பு தான். அவர்கள் மீது உள்ள தவறுகள் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி பேசுகிறார்கள். இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்பவர்களிடம் அவர்களின் தவறுகளை பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications