"பதிலடி".. கோவைக்காக ஸ்டாலின் இறக்கிய பெரிய திட்டம்.. பவரை காட்டும் திமுக.. 75 ஆயிரம் பேரா?!
கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் மாபெரும் விழா விரைவில் நடக்க உள்ளது. கொங்கில் திமுகவின் வலிமையை காட்டும் வகையில் இந்த விழா அமையும் என்று கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் வரிசையாக மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து வருகிறார்கள். முக்கியமாக அதிமுகவினர் பலர் திமுகவில் இணைந்து வருகிறார்கள். செந்தில் பாலாஜியின் முயற்சியின் மூலம் கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் வரை திமுகவில் இணைந்தனர்.
அதன்பின் பல அதிமுக நிர்வாகிகள் கரூரில் வரிசையாக திமுகவிற்கு தாவினார்கள். பின்னர் நேற்று தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் 9 ஆயிரம் பேருடன் இணைந்தார்.

மகேந்திரன்
இது போக மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். 11 ஆயிரம் தொண்டர்கள் கொண்ட லிஸ்டை இவர் முதல்வர் ஸ்டாலினிடம் அளித்துள்ளார். இவர்களும் திமுகவில் இணைய உள்ளனர். இவர்கள் எல்லாம் கொங்கு மண்டல நிர்வாகிகள். இது போக இன்னும் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய உள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏ
சேலம் மற்றும் ஈரோட்டில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் இந்த வாரம் திமுகவில் இணைய இருக்கிறார்கள். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் தோப்பு திமுகவில் இணைந்த நிலையில், இன்னொரு அமைச்சரும் விரைவில் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.

கொங்கு
இந்த நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் திமுகவில் 75-80 ஆயிரம் பேர் திமுகவில் விரைவில் இணைய இருக்கிறார்கள். அதிமுக, பாஜக நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் இணைய உள்ளனர். இதற்கான மாபெரும் விழா திமுக சார்பாக நடத்தப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விழா நடக்க உள்ளது. இதற்கான பணிகளை திமுகவினர் ஒரு பக்கம் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இதற்கான பணிகளை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

கவனம்
விரைவில் திமுகவில் இணைய போகும் அந்த முன்னாள் அதிமுக அமைச்சர், தன் பங்கிற்கு பல நிர்வாகிகளை திமுக பக்கம் கொண்டு வரும் முடிவில் இருக்கிறார். மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் இந்த விழாவில் தன் பங்கிற்கு நிறைய நிர்வாகிகளை சேர்க்கும் முடிவில் அந்த அதிமுக முன்னாள் அமைச்சர் இருப்பதாக தெரிகிறது. திமுகவில் பெரிய பொறுப்பை கேட்டு வாங்கும் வகையில் இந்த முயற்சியில் அவர் உள்ளாராம்.

எப்படி நடக்கும்
மக்கள் கூட்டம் இன்றி, கட்சியில் இணைய போகும் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இந்த விழா நடக்க உள்ளதாம். சமீபத்திய கொங்கு அரசியல் நிகழ்வுகளுக்கு திமுக கொடுக்க போகும் பதிலடியாகவும், திமுகவின் பலத்தை காட்டும் வகையிலும் இந்த கூட்டம் இருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவிற்கு தாவி வரும் நிலையில், இந்த கூட்டம் மிகப்பெரிய திருப்பத்தை கொடுக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications