அதிகாலையில் ஆடிப்போன அவிநாசி.. பாலத்தில் உருண்ட எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி.. என்ன நடந்தது கோவையில்
கோவை: கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பொதுமக்களின் அச்சம் இன்னமும் விலகவில்லை.. இன்று அதிகாலை நேரத்தில் அவிநாசி பாலத்தில் என்ன நடந்தது?
உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலம் என்ற பகுதியில் சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு லாரி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.. இதில், டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால் உள்ளேயிருந்து எரிவாயு கசிந்து கொண்டிருக்கிறது. டேங்கரின் ஒரே பகுதியில் லீக் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேம்பாலம் என்பதால் அந்த பகுதியில் மின் கம்பிகள் எதுவும் இல்லை.

லாரி: தற்போது லாரியிலிருந்து கசிந்து வரும் எரிவாயு மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லாரி டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பனி மூட்டம் காரணமாக, லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாக, கொச்சியில் இருந்து கோவைக்கு எல்பிஜி எரிவாயு ஏற்றுக்கொண்ட டேங்கர் லாரி இன்று அதிகாலை சென்றுகொண்டு இருந்தது. லாரி டிரைவர் வாகனத்தை மேம்பாலம் வழியாக செலுத்தியிருக்கிறார்.. அப்போது வாகனத்தின் ஆக்சிலேட்டர் திடீரென துண்டாகியுள்ளது... இதனால், மேம்பாலத்தில் டேங்கர் லாரியை, வளைவில் திருப்பமுடியவில்லை
ஆனால், இதில் லாரியில் இருந்த புல்லட் டேங்கர், தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்டது. எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியின் பாரம் ஏற்றும் பகுதி தனியாக பிரிந்து தறிகெட்டு ஓடி, பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த அதிர்வு காரணமாக புல்லட் டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிய துவங்கிவிட்டது. டேங்கரில் எரிவாயு இருப்பதால் தீயணைப்பு & மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூலப்பொருட்கள்: விரைந்து தீயணைப்பு துறையினர், ரசாயன மூலப்பொருட்களை கொண்டு முதலில் எரிவாயு கசிவை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.. பிறகு, லாரியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள்.. இதற்காகவே திருச்சியிலிருந்து பிரத்யேக வாகனம் வரவழைக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சேதமடைந்த பகுதியை சரிசெய்து, அந்த டேங்கரை தூக்கி நிறுத்தி கேஸ் மையத்திற்கு எடுத்து செல்லும் பணிகளும் ஆரம்பமாகியிருக்கின்றன. பாதுகாப்பு கருதி, அந்த பகுதியிலுள்ள வணிக வளாகங்களை திறக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: அதேபோல, சுற்றுவட்டாரத்தில் 500 மீட்டர் அளவில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதி வழியாக செல்லும் போக்குவரத்துகள் அனைத்தும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்கள் விடிகாலையிலிருந்தே மிகுந்த அச்சத்தில் காணப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications