"அவன் கன்னத்துல ஓங்கி அறைய வேண்டியது தான?".. மிதுன் மனைவி - கோவை மாணவி செல்போன் உரையாடல் லீக்!
கோவை பள்ளி மாணவி, மிதுன் மனைவியிடம் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது
கோவை: மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி, உயிரிழந்த மாணவியுடன் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதையடுத்து, இந்த ஆடியோவின் உண்மைதன்மை குறித்து கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவேசத்தில் உள்ளது.
ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியின் 17 வயது மாணவியின் தற்கொலைக்கு காரணம், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லைதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மேடைக்கு வாங்க.. கோவை அரசு விழாவுக்கு வந்த பாஜக எம்எல்ஏ வானதியை அழைத்த முதல்வர் ஸ்டாலின்
தற்கொலை
கடந்த 6 மாதமாக மனஉளைச்சலில் மாணவி தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.. மிதுன் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, "யாரையும் சும்மா விடாதீர்கள்" என்று எழுதப்பட்ட மாணவியின் கடைசி கடிதமும், வலுவான சாட்சியாக அமைந்துவிட்டது.. இதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆடியோ லீக்
சில தினங்களுக்கு முன்பு, மாணவிக்கும் மிதுனுக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்று, ஆடியோவாக லீக் ஆகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பி விட்டு வந்தது.. இப்போது இன்னொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது.. இதில் மாணவியும், மிதுனின் மனைவியும் உரையாடுவது போல உள்ளது.. மாணவியிடம், மிதுனின் மனைவி சில கேள்விகளை எழுப்புகிறார்.. அதற்கு கண்ணீருடன் மாணவி பதிலளிப்பது பதிவாகி உள்ளது.. அந்த ஆடியோவில் இருக்கும் சில உரையாடல் இதுதான்:
பிரண்ட்ஸ்
மிதுன் மனைவி மாணவியிடம், "டாக்குமென்ட்ரிக்கு உன்னையும் உன் பிரண்ட்ஸையும் நான் வர சொன்னேன்.. டாக்குமென்ட்ரிக்கு உனக்கு உதவியும் செய்தேன்.. அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் உன்னை வர சொல்லவே இல்லையே.. நீ எதுக்கு மறுபடியும் இங்கே வந்தே? நீ படிக்கிற பெண்தானே?... தைரியமாக இரு.. தப்பாக நடந்துக்கிறவங்களை ஓங்கி அறை விட வேண்டியதுதானே?.. நம்மை நாமதான் பார்த்துக்கணும்.." என்கிறார் மிதுன் மனைவி.
என்ன தப்பு செய்தேன்?
அதற்கு மாணவி, "பயமா இருந்தது மிஸ்.. சாரை எப்படி நான் அறைய முடியும்? இதைத்தான் மிதுன் சாரும் சொல்றாரு... நான் என்ன தப்பு செய்தேன்" என்று கேட்க, "இது சாதாரண விஷயம் இல்லை.. ரொம்ப பெரிய விஷயம்.. மீரா மேடம்கிட்ட கொண்டு போகலாம்.. நீ எதுக்கு அத்தனை மெசேஜ் அவருக்கு பண்ணே? எதுக்கு மிதுனுக்கு அடிக்கடி Hi.. Hi..ன்னு மெசேஜ் செய்றே.. ஒரு சாருக்கு இப்படி மெசேஜ் செய்றது சரியா? என்று கேட்கிறார்.
கண்ணீர்
அதற்கு மாணவி அழுதுகொண்டே "அவர்தான் பேர் சொல்லி கூப்பிட சொன்னாரு.. சார்ன்னு மட்டும் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னார.. அந்த சம்பவம் திங்கட்கிழமை ஆடிடோரியம் படிகட்டில் தான் நடந்தது" என்று மாணவி சொல்கிறார்.. அதற்கு மிதுன் மனைவி, "இதை ஏன் என்கிட்ட முதல்லயே சொல்லல.. சொல்லி இருக்கலாமே? சரி.. உன் பெற்றோரை அழைத்து வா, நாம மீரா மேடம்கிட்ட இதைபற்றி பேசலாம்" என்கிறார். அதற்கு மாணவி, "எப்படி அவங்ககிட்ட இதை சொல்றது" என்கிறார்..
சண்டை
உடனே மிதுன் மனைவி, "கிளாஸ்க்கு வராமல் கட் அடிச்சிட்டு ஏன் சுத்துறே? வீட்டில் ஏதோ சண்டைன்னு சொன்னே.. அப்போகூட கிளாஸை அட்டண்ட் பண்ணுன்னு நான் சொன்னேன் இல்லை? ஆனால், இந்த விஷயத்துல அவரை தப்பிக்க வெக்கணும்னு நினைக்கலே.. நானும் ஒரு பெண்தான்.. யார் தப்பு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய முடிவு.. அது என் கணவராக இருந்தாலும் தப்பு தப்பு தான்.. நீ ஒன்னு சொல்றே.. அவர் ஒன்னு சொல்றாரு.. உங்களை நேருக்கு நேர் வெச்சி கேட்டால்தான் யார் சொல்றது உண்மைன்னு தெரியவரும்.. நீ ரிலாக்ஸ்டா படுத்து தூங்கு.
போன்
அவரையும் கூப்பிட்டு என்ன நடந்தது, ஏது நடந்தது என்று கேட்க போகிறேன்.. அதுக்கப்பறம் மீரா மேடமுக்கு பேசறேன்.. கண்டிப்பா மீரா மேடம்கிட்ட இதை கொண்டு போனால் ஒரு தீர்வு கிடைக்கும்.. நீ போனில் வெச்சிருக்கிற ஸ்கிரீட் ஷாட், போன் கால் ஆதாரம் எல்லாத்தையும் மேடம் கிட்ட கொண்டு வா.. அதே போல, இவர் போனில் வெச்சிருக்கிற ஆதாரங்களையும் கொண்டு வரட்டும்.. அதுக்கப்பறம் யார் தப்பு பண்ணி இருக்காங்களோ, அவங்க மேல ஆக்ஷன் எடுக்கட்டும்" என்கிறார் மிதுன் மனைவி.
ஆடியோ
ஏற்கனவே தற்கொலைக்கு முன்பு எழுதியதாக சொல்லப்பட்ட அந்த துண்டு சீட்டினை மாணவி எழுதவில்லை என்கிறார்கள் சிலர்.. அதேபோல, இதற்கு முன்பு மிதுனுடன் கடைசியாக பேசியதாக சொல்லப்பட்ட ஆடியோவும் தற்கொலை செய்து கொண்ட மாணவியினுடையது என்றார்கள்.. இந்த நிலையில் இப்போது இன்னொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது.. எனினும், இந்த ஆடியோக்கள் தொடர்பான அனைத்து உண்மைகளையும் போலீஸார் விரைவில் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.