பேசக் கூட முடியாம திரும்பி வந்தது யாருங்க? - எடப்பாடி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அட்டாக்!
கோவை : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் இருப்பதாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ். இன்று கோவை வந்த அவரை வரவேற்று கோவை முழுக்க போஸ்டர்கள் பரபரத்தன.
தனது ஆதரவாளர்களுடன் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த கோவை செல்வராஜ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக அட்டாக் செய்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ் தலைமையில் இயங்குவதே உண்மையான அதிமுக எனத் தெரிவித்தார்.

கோவையில் அமோக வரவேற்பு
அதிமுக ஓபிஎஸ் அணியில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவை செல்வராஜ் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ், "ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல இருக்கிறது. ஓபிஎஸ் பட்டாவோடு அதிமுகவை நடத்தி வருகிறார். தற்போது வரை அதிமுக, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையிலேயே செயல்பட்டு வருகிறது.

நியமித்ததும் செல்லாது
எடப்பாடி பழனிசாமியால் நடத்தப்பட்ட பொதுக்குழுவும் செல்லாது. அவரால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனமும் செல்லவில்லை. அவரால் நீக்கப்பட்டதும் செல்லவில்லை. அவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்து இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் தான் தேர்தல் ஆணையத்தில் இன்றளவும் இருக்கிறது.

தரமற்ற செயல்
தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் அதிமுக சார்பில் கலந்துகொண்டேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சார்பாக அவர்கள் கலந்து கொண்டார்கள். அங்கு அவர்கள் செய்த தரமற்ற செயலை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் 72 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் அதிமுகவும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

திரும்பி வந்தது யார்
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைத்தார். ஆனால் டெல்லிக்குச் சென்ற ஒருவரை சந்திக்க பிரதமர் மோடி தனியாகச் சந்திக்க அனுமதி அளிக்காததால் திரும்ப வந்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

விரைவில் புதிய நிர்வாகிகள்
கோவை மாவட்டத்தில் விரைவில் அனைத்து கிளைக் கழகங்களுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். தற்போது உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் இல்லை. தற்போதைக்கு புதிய அலுவலகம் அமைத்து நாங்கள் செயல்பட இருக்கிறோம். தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ் தரப்பிற்கு இருக்கிறது.
|
ஜெயக்குமார் முறைகேடுகள்
முன்னாள் அமைச்சர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி நாடகம் போட்டு வருகிறார். அந்த நாடகம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேவையில்லாத கருத்துகளை கூறி வருகிறார். இப்படியே அவர் பேசி வந்தால் அவரது முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரும்" என கோவை செல்வராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications