கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி
கோவை: கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த முறை எந்த தளர்வும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டஙகள் 3 வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் வகையில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளன.
2வது வகையில், அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் உள்ளன.
3வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளன. இந்த மூன்று வகை மாவட்டங்களில் அதிகபட்ச தளர்வு சென்னை மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி, மெட்ரோ ரயில் இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான கடைகளை இரவு 7மணி வரை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை
2வது வகையில் உள்ள 23 மாவட்டங்களுக்கு பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் வகை ஒன்றில் 11 மாவட்டங்களுக்கும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் வரும் 28ம் தேதி காலை வரை அனுமதிக்கப்படும்". என்று கூறப்பட்டுள்ளது.

11 மாவட்டங்கள்
வகை-1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் விவரம் வருமாறு: தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

கடைகள் திறப்பு
மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர், எனினும் இவ்வகைக் கடைகள் திறக்க அனுமதியில்லை. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள்
வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும். வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனைக் கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications