பல நகரங்களை.. தூக்கி சாப்பிட போகுது.. அசுர வேகத்தில் வளரும் கோவை.. இதெல்லாம் செம ட்விஸ்ட்
கோவை: கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மாதந்தோறும் நிலமதிப்பு அதிகரிப்பது, ரியல் எஸ்டேட் துறையினரிடையே புதிய விவாதங்களை உருவாக்கி உள்ளது. அதிக முதலீடுகளும், புதிய நிறுவனங்களின் வருகையும் இதற்குக் காரணம். மெட்ரோ ரயில் பணிகளும் கோவையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.
ரியல் எஸ்டேட் துறையில் கோவை தற்போது அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. வீடுகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால், நடுத்தர மக்களின் வாடகை சுமையைக் குறைக்கும் வகையில் புதிய கட்டிட விதிகள் மற்றும் தளப் பரப்பளவு குறியீடுகளில் (FSI) தளர்வுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லையெனில், கோவையில் வாடகை வீடுகளின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயரக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வளர்ச்சி நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது கோவையின் நிலைமையை மேலும் வலியுறுத்துகிறது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும், கோவையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி 47% ஆக பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில், லக்னோவில் 24%, ஜெய்ப்பூரில் 21%, கான்பூரில் 20%, மற்றும் கொச்சியில் 15% வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், கோவை நகரில் ரியல் எஸ்டேட் சந்தையின் தீவிர வளர்ச்சிப் போக்கைக் காட்டுகின்றன. எனவே, எதிர்கால வீட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் குறித்து நகர திட்டமிடல் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
கோயம்புத்தூர் மெட்ரோ திட்டப்பணிகள்
தற்போது 40 கிலோமீட்டர் நீளமுள்ள கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் பணிகளும், நில அளவைப் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ₹154 கோடியை ஒதுக்கியுள்ளது. கோவை மெட்ரோவும், சென்னை மெட்ரோவை ஒத்த வேகத்தில் செயல்படும். இத்திட்டத்திற்கான 90% நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதால், நிலம் கையகப்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இல்லை. மெட்ரோ கட்டுமானத்திற்கான இயந்திரங்கள் கோவைக்கு கொண்டு வரப்படுகின்றன. விரைவில் கோயம்புத்தூரில் CMRL அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.
கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் பாதை ஐந்து முக்கிய சாலைகள் வழியாகச் செல்லும். அவை அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, சிறுவாணி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகள் ஆகும். மொத்தமாக 139 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பல முக்கிய நிலையங்கள் அமைகின்றன. உக்கடம், டவுன் ஹால், கோவை சந்திப்பு, கலெக்டரேட், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, லட்சுமி மில்ஸ் ஆகியவை இதில் அடங்கும். நவ இந்தியா, பீளமேடு புதூர், ஃபன் ரிபப்ளிக் மால், ஹோப்ஸ் கல்லூரி ஆகியவையும் இதில் சேரும்.
கோவை நில மதிப்பு
கோவை மருத்துவக் கல்லூரி, சித்ரா சர்க்கிள், எம்.ஜி.ஆர் நகர், பி.எல்.எஸ் நகர், வெங்கடபுரம் போன்றவையும் நிலையங்களாக இருக்கும். பார்க் பிளாசா, நீலாம்பூர் நிலையம், கோவை விமான நிலையம், கோயம்புத்தூர் சந்திப்பு, ராம் நகர் ஆகியவையும் இதில் வரும். மேலும் காந்திபுரம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மூர் மார்க்கெட், கணபதி புதூர் போன்ற இடங்களும் அடங்கும். அத்திபாளையம் சந்திப்பு, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சித்ரா நகர் ஆகியவையும் முக்கிய நிலையங்கள். சரவணம்பட்டி, விஸ்வாசபுரம், வி.ஜி.பி நகர், வலியம்பாளையம் ஆகியவை பிற நிலையங்கள்.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி கணிப்புகள்
கோயம்புத்தூரில் நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக, ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, உக்கடத்தில் 50% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. அவினாசியில் 40% மதிப்பு உயரக்கூடும். விநாயகபுரத்தில் 60% மற்றும் பீளமேட்டில் 45-55% என ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும். சிறுவாணி சாலையில் 60% மதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோவின் முதல் கட்டப் பணிகள் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும். மூன்று வணிக வளாகங்கள், எல்.எம்.யு.சி உயர் சாலை, ஒரு பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றை இது இணைக்கிறது. விமான நிலையத்தையும் இது சென்றடையும். மேலும், 4 ஐந்து நட்சத்திர விடுதிகள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் மெட்ரோ இணைக்கிறது. இது நகரின் இணைப்புத்திறனை மேம்படுத்தி, பெரும் போக்குவரத்து மாற்றத்தை உருவாக்கும்.
திட்டத்திற்கான நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல்
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. மதுரை மற்றும் கோவைக்கு புதிய விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சமர்ப்பிக்கப்பட்ட DPR, சில தவறுகளால் நிராகரிக்கப்பட்டது. தற்போது புதிய DPR தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை முதன்மை திட்டங்களாக அறிவித்து முக்கியத்துவம் அளிக்கிறது. அடுத்த மாதமே இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. பெரும்பாலும் அரசு சாலைகள் மற்றும் சாலைகளுக்கு அருகிலுள்ள இடங்களிலேயே நிலம் எடுக்கப்படும். இதனால் பணிகள் எளிதில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் 5 முக்கிய இடங்கள்
கோயம்புத்தூரில் 5 முக்கிய இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும். அவினாசி சாலையில் கணியூர் வரை முதல் கட்டமாக இத்திட்டம் கொண்டுவரப்படும். இத்திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்டப் பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும். தமிழக அரசு கோவை மெட்ரோ கட்டுமானத்தில் தீவிரமாக உள்ளது. பணிகள் விரைவாகத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் கோயம்புத்தூரின் பல முக்கிய பகுதிகளை இணைக்கும். இது கோயம்புத்தூரின் மிகப்பெரிய வளர்ச்சிப் பாய்ச்சலாக அமையும். முழு அளவிலான மெட்ரோ சேவை, சென்னை மெட்ரோவைப் போலவே இருக்கும். வேகமான, அதிகப் பெட்டிகளைக் கொண்ட முழுமையான மெட்ரோ சேவை கோயம்புத்தூருக்குக் கிடைக்கிறது. இது நகரத்தின் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும். கோயம்புத்தூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications