பயங்கரம்.. கோர்ட் வளாகத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை.. கோவையில் பரபர சம்பவம்.."பழிக்குப்பழி?"
கொலை செய்யப்பட்ட கோகுலின் தனது உடைக்குள் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தங்களை கொலை செய்ய சிலர் முயற்சிப்பது கோகுலுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கக் கூடும் என போலீஸார் கூறுகின்
கோவை: கோவையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் ஒருவரை மர்மகும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த துணிகர கொலை சம்பவம் கோவை மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஜராக வந்த நண்பர்கள்
கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர்கள் இருவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஒரு வழக்கில் ஆஜராவதற்காக அவர் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இன்று காலை வந்தனர். தங்கள் வழக்கு விசாரணைக்காக காத்திருந்த அவர்கள், சிறிது நேரம் கழித்து நீதிமன்றத்துக்கு பின்புறம் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர்.

பாய்ந்து வந்த கொலை கும்பல்
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக, அவர்களை நோக்கி பாய்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அவர்களை வெட்டினர். இதனால் பயந்துபோன இருவரும் உயிரை காப்பாற்ற அங்கிருந்து ஓடினர். ஆனாலும் விடாத அந்த கும்பல், நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர். இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

ஓட ஓட விரட்டி..
இந்த சம்பவத்தில் கோகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் அங்கு வந்து கோகுலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மனோஜை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இருவரையும் வெட்டிய கும்பல் மிகவும் சர்வ சாதாரணமாக அங்கிருந்து நடந்து சென்ற சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உடைக்குள் கத்தி.. பழிக்குப்பழியா?
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கோகுலின் தனது உடைக்குள் ஒரு பட்டா கத்தியை மறைத்து வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தங்களை கொலை செய்ய சிலர் முயற்சிப்பது கோகுலுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கக் கூடும் என போலீஸார் கூறுகின்றனர். எனவே, இது பழிக்குப்பழியான கொலையாக இருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சூழலில், கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 கொலைகள் நடந்திருக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications