எம்பி சீட் கிடைக்காததால்தான் கணேசமூர்த்தி உயிரை விட்டாரா.. உண்மையல்ல.. வைகோ மறுப்பு
கோவை: எம்பி சீட் கிடைக்காமல் ஈரோடு லோக்சபா உறுப்பினர் கணேசமூர்த்தி இறந்தார் என்பது 1 சதவீதம் கூட உண்மையல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கணேசமூர்த்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கோவைக்கு விமானம் மூலம் வந்துள்ளார் வைகோ. அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், எம்பி சீட் கிடைக்காததால்தான் கணேசமூர்த்தி உயிரை விட்டார் என பத்தரிகைகளில் செய்திகள் வருகின்றன.

அதில் ஒரு சதவீதம் கூட உண்மை அல்ல. "ஒரு சீட் கொடுத்தால் துரை போட்டியிடட்டும். திமுகவில் மதிமுகவுக்கு இரண்டு சீட் ஒதுக்கினால் பரிசீலனை செய்யுங்கள்" என்றுதான் கணேசமூர்த்தி கூறியிருந்தார். கணேசமூர்த்தியின் இறப்பு தலையில் இடி விழுந்ததுபோல் இருக்கிறது. கொள்கையும் லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கணேசமூர்த்தி.
திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பாகவே சேர்ந்து ஈரோடு நாடாளுமன்ற எம்பியானார். திமுக உறுப்பினராக தொடர்ந்ததால் மதிமுகவில் வேறு பொறுப்பிற்கு வர முடியாத நிலை இருந்தது. ஆனால் சட்டசபை தேர்தலில் உரிய இடம் கொடுப்பதாக கூறியிருந்தோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவை தொகுதி எம்பியாக பதவி வகித்து வந்தவர் கணேசமூர்த்தி (77). ஈரோடு பெரியார் நகரில் வசித்து வரும் இவருக்கு கபிலன் என்ற மகனும் தமிழ்பிரியா என்ற மகளும் உள்ளனர். இவருடைய மனைவி பாலாமணி ஏற்கெனவே காலமாகிவிட்டார். ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த 24 ஆம் தேதி காலை கணேசமூர்த்தி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை முயற்சி செய்திருந்தார்.
இந்த தகவலை தனது மகனிடமும் அவர் தெரிவித்திருந்தார். உடனே ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகவே இருந்தது. மருத்துவர்களும் அவர் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கணேசமூர்த்திக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கணேசமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான சென்னிமலையை அடுத்த குமாரவலசு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது தோட்டத்திலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியது தொடர்பான பொடா வழக்கில் வைகோவுடன் சேர்த்து கணேசமூர்த்தியும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications