வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு.. மதிமுகவிலிருந்து மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் விலகல்!
கோவை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் வே. ஈஸ்வரன் பதவி விலகியுள்ளார்.
கடந்த 1990 களில் திமுகவில் இருந்த வைகோ, அதன் தலைவர் கருணாநிதிக்கு அடுத்த நிலையில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது வாரிசு அரசியல், வைகோவுக்கான செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால் திமுக தலைவராக இருந்த கருணாநிதி, வைகோ மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதற்கு வைகோ விளக்கம் அளித்தார். எனினும் அதை கருணாநிதி ஏற்கவில்லை. இதனால் கட்சியிலிருந்து வைகோவை வெளியேற்றினார். வைகோவின் விளக்கத்தை ஏற்ற திமுகவின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் வெளியேறினர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இதையடுத்து வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். கருணாநிதிக்கு அடுத்தபடியாக செல்வாக்குமிக்க தலைவராக வைகோ வலம் வந்ததால் மதிமுக பெரிய அளவில் அரசியலில் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சி பல்வேறு திசைகளில் பயணித்து கூட்டணியுடன் இணைந்து சொற்ப அளவிலான சீட்டுகளில் வெல்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தது.

மருத்துவமனை
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது 20 ஆண்டுகள் கழித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்றார் வைகோ. அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கருணாநிதியின் ஆசைபடி மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவேன் என சபதம் செய்தார்.

திமுக- மதிமுக கூட்டணி
இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்தது. இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நீண்ட காலத்திற்கு பின்பு வைகோ தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடர்ந்த நிலையில் கணிசமான மதிமுகவினர் சட்டசபைக்கு சென்றனர்.

விருப்பம்
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலையொட்டி மதிமுகவின் வெற்றிக்காக அதன் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி பாடுபட்டார். பல இடங்களில் பிரச்சாரங்களில் மேற்கொண்டார். இதனால் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும் என கட்சியினர் விரும்பினர். ஆனால் இதில் வைகோவுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கட்சியின் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்றார்.

ரகசிய வாக்குப்பதிவு
இதையடுத்து நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் துரை வைகோவுக்கு பதவி கொடுக்கலாமா வேண்டாமா என எழுதி வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டு ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் வைகோவும் பங்கேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

துரை வைகோவுக்கு பதவி
இதில் 106 பேரில் 104 பேர் துரை வைகோவுக்கு கட்சி பதவி கொடுக்கப்பட வேண்டும் என வாக்களித்தனர். இதையடுத்து துரை வைகோவுக்கு தலைமை கழக செயலாளர் பதவியை கொடுப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இனி துரை வைகோ முழு நேர அரசியல் பணியாற்றுவார் என்றும் வைகோ தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு கோவையைச் சேர்ந்த மதிமுக மாநில நிர்வாகி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இளைஞரணி செயலாளர் எதிர்ப்பு
கோவையை சேர்ந்தவர் வே. ஈஸ்வரன். இவர் மதிமுகவில் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். துரை வைகோவுக்கு முக்கிய பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் அளித்த பேட்டியில், நான் எது நடக்கக் கூடாது என நினைத்தேனோ அது நடந்து விட்டது. மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை நான் தொடங்குகிறேன். இது அரசியல் இயக்கம் அல்ல, மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லாத நிலையில் அதை திணிக்க வேண்டிய அவசியம் ஏன். துரை வைகோவால்தான் கட்சியை வளர்க்க முடியும் என நினைப்பது ஏன் என்றும் அவர் கேள்வியுள்ளார். துரை வைகோவுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications