மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை
கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் நர்ஸ் மற்றும் டாக்டர்களின் அலட்சியத்தால், பச்சிளம் குழந்தையின் உடலில் 20 நாட்கள் ஊசி சிக்கி இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, அரசு மருத்துவமனையொன்றின் மீது எழுந்துள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டாக இது பார்க்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிராபகரன் மற்றும் மலர்விழி தம்பதியின் ஆண் குழந்தைக்குதான் இந்த கொடுமையை இழைத்துள்ளது அரசு மருத்துவமனை. மலர்விழிக்கு கடந்த மாதம் 20ம் தேதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மறுநாள், மருத்துவர்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர்.
குழந்தையின் இடது கையில் ஒரு ஊசியும், இடது கால் தொடை பகுதியில் ஒரு ஊசியும் என மொத்தம், இரண்டு ஊசிக்கள் போடப்பட்டன.
தடுப்பூசி போட்ட பிறகு, குழந்தை அழுது கொண்டேயிருந்துள்ளது. இருப்பினும் 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் மலர்விழி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் குழந்தையின் அழுகை நிற்கவில்லை. ஒருவாரமாக குழந்தை தூக்கத்தை கெடுத்துக்கொண்டு அழுதுள்ளது. அதிலும் இடதுபுறமாக திரும்பி படுத்தால் ரொம்பவே வீறிட்டு கத்தி அழுதுள்ளது அந்த குழந்தை.
இந்த நிலையில், குழந்தையின் பாட்டி ஒருநாள் குழந்தையை குளிக்க வைத்து, கழுவிவிட்டபோது, காலின் வெளியே நீட்டிக் கொண்டு இருந்த ஒரு ஊசி அவர் கையை பதம் பார்த்து ரத்தம் வெளியே வந்துள்ளது. இதன்பிறகுதான், குழந்தையின் காலுக்குள் இருந்து ஊசி நீட்டிக் கொண்டு இருந்ததை, உறவினர்கள் கவனித்தனர்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், மருத்துவர் மூலமாக, அந்த ஊசியை அகற்றினர். குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையின் செவிலியர்கள், டாக்டர்களின் அலட்சிய போக்கால், பச்சிளம் குழந்தை ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளதை நினைத்து குமுறும் உறவினர்கள், மேட்டுப்பாளையம், அரசு மருத்துவமனையின், தலைமை மருத்துவரிடம் புகார் மனு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications