"வீண் விளம்பரம்".. 36 நிமிட பேட்டியில் ஒரு முறை கூட அண்ணாமலை பெயரை சொல்லாத செந்தில் பாலாஜி.. சுளீர்
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் இன்று ஒரு முறை கூட அண்ணாமலை பெயரை அவர் பயன்படுத்தவில்லை. செய்தியாளர்கள் பலர் அண்ணாமலை பற்றி அடிக்கடி கேள்வி கேட்டும் அதற்கு செந்தில் பாலாஜி, அவர் பெயரை பயன்படுத்தவில்லை.
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை செய்தார். திமுக சார்பாக கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் தொடர்பாக செந்தில் பாலாஜி ஆலோசனை செய்தார்.
கோவை ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.

ஆலோசனை
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, கோவையில் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது. கார் வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் உடனே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக சட்ட ஒழுங்கு கெடாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது. தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர் சந்திப்பு
கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் அண்ணாமலை ஆளும் திமுக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அண்ணாமலை
இதற்கு அண்ணாமலையின் பெயரை கூட பயன்படுத்தாமல் செந்தில் பாலாஜி இதற்கு பதில் அளித்தார். 36 நிமிடம் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசினார். அதில் ஒரு முறை கூட அண்ணாமலை பெயரை செந்தில் பாலாஜி பயன்படுத்தவில்லை. "நீங்கள் சொல்லும் கட்சியின் தலைவர்".. "நீங்கள் சொல்லும் நபர்".. "அவர்" என்று மட்டுமே செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். மற்றபடி அண்ணாமலை பெயரை எங்கும் அவர் குறிப்பிடவில்லை.

செந்தில் பாலாஜி
அவருக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதை விட.. அவருக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை. அரசியல் பக்குவமில்லை. அரசியலில் எந்த விதமான புரிதலும் இல்லாமல் செயல்படுகிறார், என்று அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அந்த கட்சியின் தலைவரிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும். கோவை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு முன்பே சில தகவல்களை "அவர்" வெளியிட்டது ஏன்?

ஏன் இப்படி
கோவை சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். இந்த தகவல் எல்லாம் அவருக்கு எப்படி வந்தது என்பதை என்ஐஏதான் முதலில் விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். ஆனால் அப்போதும் கூட அண்ணாமலையின் பெயரை செந்தில் பாலாஜி பயன்படுத்தவே இல்லை. இது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுகவினரிடத்தில் விசாரித்ததில்.. அண்ணாமலை யார்? அவர் எம்பியா? எம்எல்ஏவா? அவர் அரசியலுக்கு புதிது தானே? அவருக்கு எல்லாம் விளம்பர தர வேண்டாம் என்று செந்தில் பாலாஜி இப்படி செய்து இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications