அண்ணாமலை நம்பர் 1 முட்டாள்! மட்டரக அரசியல்வாதி! கடுகடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி!
கோவை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நம்பர் 1 முட்டாள் எனக் கூறி விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
அண்ணாமலை மட்டரக அரசியல் செய்கிறார் என்றும் அவர் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கடுகடுத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு முதல் கைது செந்தில்பாலாஜி கைதாக தான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி அளித்திருந்த நிலையில் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அண்ணாமலை படித்த முட்டாளாக இருப்பதாகவும் முட்டாள்களிலேயே நம்பர் 1 முட்டாளாக அவர் இருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி சாடியிருக்கிறார்.

முக்கிய நபர் இல்லை
கோவையில் ஒரு வார்டில் கூட வெற்றிபெறாத பாஜக எதன் அடிப்படையில் எதிர்க்கட்சி ஆக முடியும் என வினவிய அவர் அண்ணாமலை பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாகவே தாம் கருதுவதில்லை எனத் தெரிவித்தார். வெறும் 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக விமர்சித்தார். அண்ணாமலையை ஊடகங்கள் தான் முக்கிய நபராக காட்டுவதாகவும் பேட்டிகளின் போது தன்னிடம் எது மாதிரியான கேள்விகள் கேட்க வேண்டும் என்பதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி பாடம் எடுத்தார்.

தொழில் தலைநகரம்
தமிழகத்தின் தலைநகராக சென்னை விளங்கினாலும் கூட தொழில்துறையின் தலைநகராக கோவை திகழ்வதாகவும் கோவையை இன்னும் வளர்ச்சி அடைய வைப்பதற்கான செயல்திட்டங்களோடு அதை நோக்கி தாங்கள் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இதனால் மட்டரக அரசியல்வாதி சொல்லும் கீழ்த்தரமான கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

எதிர்க்கேள்வி
இதனிடையே அங்கிருந்த நிருபர் ஒருவர் ஏதோ கேட்க, அவரிடம் திருப்பி எதிர்க்கேள்வி கேட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி. மொத்தத்தில் அண்ணாமலை மீது ஏக கோபத்தில் இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவர்கள் இருவருமே கரூர்காரர்கள் என்பதும் இப்போது கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றியை குறிவைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications