கோவை திமுகவில் கோஷ்டி கானம்! திணறும் அமைச்சர் செந்தில்பாலாஜி! கொண்டாடும் எஸ்.பி.வேலுமணி!
கோவை: கோவை திமுகவில் கோஷ்டிக்கானம் பாடும் உடன்பிறப்புகளால் மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி சற்று திணறி வருவதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கோவையில் கோஷ்டிப்பூசலை பஞ்சாயத்து செய்யவே அதிக நேரம் செலவிட வேண்டியது உள்ளதாம்.
திமுகவின் இந்த பலவீனத்தை தங்களுக்கான பலமாக கருதும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.

கோவை மாநகராட்சி
பொங்கல் பண்டிகைக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகராட்சி தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. கோவை அதிமுகவின் கோட்டை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ள சூழலில், அதனை உடைத்தெறிந்து அங்கு திமுகவின் கொடியை நிலை நாட்ட வேண்டும் என்பதில் அக்கட்சி தலைமை மிக உறுதியாக இருக்கிறது.

பல கோஷ்டிகள்
இதற்காகத் தான் அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க வைத்துள்ளது. கோவையை பொறுத்தவரை பொங்கலூர் பழனிசாமி, சிங்காநல்லூர் கார்த்திக், சேனாதிபதி, வீரகோபால், ராமச்சந்திரன், என ஏராளமான கோஷ்டிகள் திமுகவில் இருக்கின்றன. இந்த கோஷ்டிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வேலை வாங்குவதற்குள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு போதும் போதும் என்றாகிவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒத்துழைப்பு
ஆரம்பத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கோவை திமுக நிர்வாகிகள் மத்தியில் அவர் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காவிட்டாலும் கூட, அடுத்தடுத்து தலைமை அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து இப்போது அந்த நிலைமை மாறத் தொடங்கியிருக்கிறதாம். இதனிடையே திமுகவில் கோஷ்டிக்கானம் பாடும் உடன்பிறப்புகளால், எதிர்த்தரப்பான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டீம் படு உற்சாகமாக கோவை மாநகராட்சி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறதாம்.

தொண்டர்கள்
தனக்கு ஒத்துழைப்பு நல்காத திமுக நிர்வாகிகளை பற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி கவலைப்பட்டதாக தெரியவில்லையாம். இளைஞர்களையும், எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கும் தொண்டர்களையும் வைத்து தனது தேர்தல் செயல்திட்டங்களை இனி வரும் நாட்களில் அரங்கேற்ற உள்ளாராம். தேர்தலுக்கு பிறகு கோவை மாவட்ட திமுகவில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications