கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை போட்டியா? பரபரப்பான பதில் அளித்த எல்.முருகன்
கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் தமிவக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறாரா என்ற கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை முடுக்கிவிடும் வகையில் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் நடந்துள்ளது.

அதில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் தயாரிப்புகள் குறித்து தலைவர்கள் அறிவுரை வழங்குவார்கள். கூட்டணியை பொருத்தமட்டில் தேசிய தலைமைதான் அதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள்.
எத்தனை கட்சிகள் கூட்டணிக்கு வருகிறார்கள். எந்தெந்த கட்சிகள் எல்லாம் வருவார்கள் என்பது குறித்தெல்லாம் தேசிய தலைமைதான் அறிவிக்கும். வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமையும் நாடாளுமன்ற குழுவும் அறிவிக்கும். பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பி கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் நல்லதுதான்.
அதற்கான வேலைகளை செய்ய தயாராக உள்ளோம். நடிகர் விஜய் கட்சி தொடங்கினாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கு பெறவில்லை. அப்போது நடக்கும் அரசியல் குறித்து அவர் கவனிக்க வாய்ப்புண்டு. என்னை பொருத்தமட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு வேகம் எடுக்க வாய்ப்புள்ளது.
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைத்து 19 சதவீதம் வாக்குகளை பெற்றோம். அத்துடன் கன்னியாகுமரி, தருமபுரியில் வென்றோம். எனவே 3ஆவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வரவே முடியாது என்பது ஏற்கெனவே பொய்யாகிவிட்டது.
தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் தேசத்திற்கு எதிரான செயல்களிலும் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுள்ளார்கள் என தேசிய புலனாய்வு முகமை (NIA) சுட்டிக் காட்டியுள்ளது. இதுவரை தமிழக காவல் துறையினர் நாம் தமிழர் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ஐஏ, நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்த பிறகு நாட்டிற்கு எதிரான செயல்களை அவர்கள் செய்தனர் என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த நாட்டை பாதுகாக்கும் மிக முக்கிய அமைப்பு தேசிய புலனாய்வு முகமைதான். நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம், தேச விரோத செயல்கள் மீது கண்காணித்து செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்புதான் என்ஐஏ. அந்த அமைப்பு அவர்களது வேலையை சிறப்பாக செய்கிறது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உடனே என்னை மிரட்டுறாங்க, என்னை காப்பாற்றுங்க என அலறுவார்கள். இந்த வேலையைத்தான் சீமான் செய்கிறார் என எல் முருகன் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் எல் முருகனும், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடியும் போட்டியிடுகிறார்கள் என சொல்லப்படுகிறது. அது போல் விருதுநகர் தொகுதியில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications