"மதமென பிரிந்தது போதும்".. கோவை இந்துக்கள் திருவிழாவில் மனம் குளிரவைத்த இஸ்லாமியர்கள்
கோவை: இந்துக்கள் திருவிழாவில் முஸ்லிம்களும், முஸ்லிம்களின் பண்டிகைகளின் போது தண்ணீர், உணவு, இனிப்புகள் போன்றவை கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், கோவை அருகே துடியலூரில் நடைபெற்ற கோவில் திருவிழா ஊர்வலத்தில், அப்பகுதி இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர், இனிப்பு போன்றவற்றை வழங்கி அன்பை வெளிப்படுத்தியது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் பண்டிகைகளின்போது ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறுவது, தண்ணீர், உணவு வழங்குவது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான அரவான் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரவான் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு அரவான் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் திருவிழாவில், துடியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கோவிலுக்கு அருகில் உள்ள பழமையான பள்ளிவாசல் முன்பு ஊர்வலம் சென்றது. பக்தர்கள் ஊர்வலமாக வந்த போது மாலை தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தினர். வெவ்வேறு மதங்களாக இருப்பினும் ஒருவரின் வழிபாட்டை மற்றொருவர் மதித்து திருவிழாவில் அன்பை வெளிப்படுத்தி கொண்ட சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.












Click it and Unblock the Notifications