பாஜக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு.. முன்விரோதம் காரணமா?.. கோவையில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகியை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிர்வாகிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், வடவள்ளி செல்லும் சாலையில் உள்ள சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் சதீஷ்குமார் (28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதோடு, ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞர் அணி செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் சதீஷ்குமார் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்துக்குள் திடீரென புகுந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த நான்கு பேரும் சதீஷ்குமாரை ஆயுதங்களால் தாக்கி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், சதீஷ்குமாரின் இரண்டு கைகளின் மணிக்கட்டுகளிலும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சதீஷ் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ஆர்.எஸ். புரம் போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மர்ம கும்பலால் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் எரியூட்டி வேலு என்பவரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், எரியூட்டி வேலு மற்றும் சரவணன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.எஸ்.புரம் மண்டல் இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முன்பு இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் வசந்த ராஜன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், காவல் துறையினர் இச்சம்வபத்தில் சம்பந்தப்பட்ட சில நபர்களை கைது செய்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களை விரைந்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளதால் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications