1999 பிளாஷ்பேக்.. கோவையில் தோல்வியடைந்த நல்லகண்ணு – சி.பி. ராதாகிருஷ்ணன் மனதில் ஆறாத ரணம்
கோவை: இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியுமான நல்லகண்ணு உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். எளிமை, நேர்மைக்கு பெயர் பெற்ற நல்லகண்ணு மறைவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நாடே போற்றும் அந்த மகத்தான மனிதர் தேர்தல் அரசியலில் களம் கண்டு வெற்றி பெறாதவர். கோவை தொகுதியில் போட்டியிட்டபோது நல்லகண்ணுவின் செயல்பாட்டை அரசியல் கட்சியினர் இப்போதும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்கள்.
போராட்ட களமும், சிறை வாசத்தையும் அதிகம் அனுபவித்த நல்லகண்ணு தேர்தல் களத்திலும் போட்டியிட்டுள்ளார். 1980 தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதேபோல 1999 நாடாளுமன்ற தேர்தலில் பதற்றமான கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் களத்தில் அவர் சமசரமில்லாமல் நேர்மையுடன் பயணித்தது தான் ஹைலைட்.

நல்லகண்ணுவின் தேர்தல் நேர்மை
1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பிறகு நடைபெற்ற 1999 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி அதிக கவனம் பெற்றது. திமுக - பாஜக கூட்டணியில் சி.பி. ராதாகிருஷ்ணன் (இப்போதைய துணை ஜனாதிபதி) வேட்பாளராக களமிறங்கினார். அதிமுக - சிபிஐ கூட்டணியில் நல்லகண்ணு வேட்பாளராக களம் கண்டார்.
தற்போது போலவே அப்போதும் எதிர்க்கட்சிகள் கூட மரியாதை கொடுக்கும் அரசியல் தலைவராக நல்லகண்ணு இருந்தார். குண்டு வெடிப்பு பதற்றம் அதிகமாக இருந்த காலகட்டம். அதிமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் முஸ்லீம் லீக் இடம் பெற்றிருந்தது. பொதுவாக வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டிருக்கும்.
சிறுபான்மையினர் நலன்
அப்படி ஒருமுறை பிரச்சாரத்திற்கு செல்லும்போது, பிரச்சார வாகனத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி இடம்பெறவில்லை. இதை கவனித்த நல்லகண்ணு, ஏன் முஸ்லீம் லீக் கட்சி கொடி இடம்பெறவில்லை என்றார். அதற்கு முஸ்லீம் கட்சியினர், இன்றைக்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் செல்கிறோம். எங்கள் கொடி இருந்தால் அது பிடிக்காமல், சிலர் வாக்களிக்காமல் போகலாம். அதனால் நாங்கள் தான் அகற்றினோம் என முஸ்லீம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
அதற்கு நல்லகண்ணு, உங்களின் கொடியில்லாமல் சென்றால் தான் வெற்றி பெற முடியும் என்றால் எனக்கு அந்த வெற்றியே தேவையில்லை. கொடியை கட்டிவிட்டு, வண்டியில் ஏறுங்கள் என்று முஸ்லீம் லீக் நிர்வாகிகளை அழைத்து சென்றார். வாக்கு அரசியலுக்காக சிறுபான்மை மக்கள் நலனை விட்டு கொடுக்காத கொள்கை தலைவர் என்று இப்போதும் அந்த சம்பவத்தை நினைவூட்டி அரசியல் கட்சியினர் அவரை பாராட்டுவார்கள்.
சி.பி ராதாகிருஷ்ணனின் பாசம்
ஆனால் அந்த தேர்தலில் நல்லகண்ணு வெற்றி பெறவில்லை. சி.பி. ராதாகிருஷ்ணன் 4.30 லட்சம் வாக்குகளும், நல்லகண்ணு 3.75 லட்சம் வாக்குகளும் பெற்றனர். சுமார் 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் நல்லகண்ணு தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற பாஜக ராதாகிருஷ்ணன், வெற்றி சான்றிதழை நல்லகண்ணுவிடம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே வெற்றி பெற்ற வேட்பாளர், தோல்வியடைந்த வேட்பாளரிடம் ஆசி பெற்றது இங்கு தான் நடந்துள்ளது.
சி.பி ராதாகிருஷ்ணன் எம்பியாக, ஆளுநராக, நாட்டின் துணை ஜனாதிபதி இருக்கிறார். அரசியலில் நேர்மையான நல்லகண்ணு ஐயாவை தோற்கடித்த போது மிகவும் வருத்தப்பட்டேன் என்று ராதாகிருஷ்ணன் தன் நண்பர்களிடம் ஆதங்கப்பட்டு வருகிறார். நல்லகண்ணுவை தோற்கடித்த மண் என்கிற விமர்சனம் கோவை மக்கள் மீதும் தற்போதுவரை உள்ளது.












Click it and Unblock the Notifications