கோவை ரிசார்ட்களுக்கு பறந்த நோட்டீஸ் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செக்
கோவை: நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். கோவை வனப்பகுதியில் உள்ள ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டதில் ஈடுபட கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும் விதிகளை மீறி ஆனைகட்டி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி இயங்கும் ரிசார்டுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை ரிசார்ட்களுக்கு ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்த உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் அமைந்துள்ள கேளிக்கை விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள், அதிக ஒளி எழுப்பும் விளக்குகள் மற்றும் பட்டாசுகள் பயன்படுத்த கூடாது. அதிகளவு கூட்டம் கூடி நெரிசல் ஏற்படுத்தி, வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் தொந்தரவு செய்ய கூடாது.

வனத்துறை தடை
வனப்பகுதிக்கு அருகே உள்ள ரிசார்ட்களில் நெருப்பு வைத்து கேம்ப் பயர் வைக்க கூடாது. மது அருந்திவிட்டு வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் பயணிக்க கூடாது. வனவிலங்குகள் தென்பட்டால் அதை பொது மக்களே விரட்டாமல், வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் இரவு 8 மணிக்கு மேல் வனச்சாலைகளை பயன்படுத்த கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஏற்படும் கழிவுகளை வனப்பகுதியில் கொட்ட கூடாது. அவற்றை உரியமுறையில் வெளியேற்ற வேண்டும். இந்த விதிகளை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள், பொது மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய விடுதிகள் பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்." என்று கூறியுள்ளனர்.
உணவு பாதுகாப்பு துறையும் நடவடிக்கை
இதேபோல உணவு பாதுகாப்புத்துறையினர் கடந்த வாரம் ஆனைகட்டி பகுதிகளில் உள்ள ரிசார்ட்களில் ஆய்வு செய்தனர். அதில் சுகாதாரமின்றி உணவு தயாரித்த மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத 4 ரிசார்ட்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். கடுமையான உத்தரவுகள் வந்தாலும் விதிகளை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.











Click it and Unblock the Notifications