இந்து அமைப்பினரை கொலை செய்ய சதி திட்டமா ?... கோவையில் என்ஐஏ திடீர் சோதனை
கோவை: கோவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து அமைப்பினர் சிலரை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ரகசிய உறுப்பினர் என கூறப்படும் இஸ்மாயிலுக்கு சொந்தமான திண்டிவனம் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சாகுல் ஹமீது, ஜாகிர் உசேன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை குனியமுத்தூர், வெரைட்டி ஹால் ரோடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, (29) திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில், (25) பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20) சென்னையை சேர்ந்த சலாவுதீன், (25) கோவை, என்.எச்., ரோட்டை சேர்ந்த ஆசிக் (25) ஆகியோரை கடந்த செப்டம்பர் 1ம் தேதி கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் (யு.ஏ.பி.ஏ.,) வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்து அமைப்பினர் சிலரை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கு தொடர்பாக, தன்னிடம் உள்ள ஆதாரங்களை, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜுன் சம்பத், என்.ஐ.ஏ., அலுவலகத்தில் கடந்த வாரம் ஒப்படைத்தார். இந்து இயக்க தலைவர்களை கொலை செய்து, மத ரீதியிலான மோதலை ஏற்படுத்த அவர்கள் சதி திட்டம் தீட்டி இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications