கோவை ஜமேஷா முபினின் வீட்டிலிருந்து ரகசிய குறியீட்டு பறிமுதல்.. சுற்றுலா தலங்களை தகர்க்க திட்டம்?
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு ரகசிய குறியீட்டுடன் சீட்டு ஒன்று போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. சம்பவ இடத்தில் போலீஸார் ஓடி சென்று சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் ஒருவர் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது.

பழைய துணி விற்பனையாளர்
இதையடுத்து பழைய துணி விற்பனையாளரான ஜமேஷா முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாட்சியம் நைட்ரேட், சல்ஃபர், அலுமினியம் பவுடர், கரி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

என்ஐஏ பரிந்துரை
இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளும் நேற்று விசாரணை நடத்தினர். என்ஐஏ அதிகாரிகள் கார் வெடித்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவை கோட்டைமேடு எச்.எம்.பிஆர். தெருவில் உள்ள முபினின் வீட்டில் போலீஸார் ரகசிய சோதனை நடத்தினர். அப்போது கோவை மாநகர பகுதியில் குறி வைக்கப்பட்ட முக்கிய இடங்கள் குறித்த சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரகசிய குறியீடு
அதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக சுற்றுலா தலங்கள் என அந்த ரகசிய குறியீட்டில் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜமேஷா முபின் இலங்கை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீனின் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளதும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

தீபாவளி பண்டிகை
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலில் அசம்பாவிதச் சம்பவத்தை நிகழ்த்தவே முபின் காரில் வெடி பொருட்களுடன் வந்திருக்கலாம் என்றும் , அப்போது போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டதால் முபின் வெடி பொருட்களை வெடிக்கச் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் இறப்பு குறித்து முபின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஸாக வைத்திருந்ததும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. எனவே இந்த சம்பவத்தில் முபின் தற்கொலை படையாக செயல்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

77 கிலோ வெடி பொருட்களா
கோவை கார் வெடிப்பு சம்பவம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். முபின் வீட்டிலிருந்து 77 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு கோவை தெற்கு பகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது எல்லா விஷயத்திற்கும் பேசும் முதல்வர் ஸ்டாலின் கோவை கார் வெடிப்பு குறித்து மட்டும் எதையும் பேசாதது ஏன் என்ற கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications