இதென்னப்பா கோவைக்கு வந்த சத்திய சோதனை.. 3 முறை மேம்பாலம் டெண்டர்.. எடுக்கத்தான் யாருமே முன்வரவில்லை
கோவை: இதென்னடா கோவைக்கு வந்த சோதனை என்பது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.. கோவை சிங்காநல்லூரில் ரூ.141 கோடி செலவிலான மேம்பாலம் கட்ட 3 முறை டெண்டர் நோட்டீஸ் விட்டும், யாரும் டெண்டர் எடுக்க முன்வராத காரணத்தால் அங்கு மேம்பால பணிகள் தாமதமாகி உள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் வாகன போக்குவரத்து மிக அதிகமாகும். கேரளாவின் நுழைவு வாயிலாக உள்ள கோவை, கல்லூரிகளின் தலைநகராகவும் இருக்கிறது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. கோவையில் ஜவுளி ஆலைகள், பம்பு செட்டுகள், மோட்டார்கள், கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலைகள், கிரைண்டர், மிக்சி உற்பத்தி ஆலைகள், ஐடி நிறுவனங்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்துவரும் பெருநகரங்களில் ஒன்றாக கோவை இருக்கிறது.

கோவையை பொறுத்தவரை கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.. கோவையும், திருப்பூரும் இரட்டை நகரங்கள் என்கிற அளவிற்கு தொழிற்சாலைகள் பெருகி கிடக்கின்றன. இதனால் தினசரி வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்வோர், வெளியூர் செல்பவர்களால் அதிக வாகனப் போக்குவரத்து நிறைந்த பகுதியாக கோவை மாறிவிட்டது.
கோவையில் நீண்ட தலைவலியாக இருந்த முக்கிய சிக்னல்களில் இப்போது மேம்பாலம் இருக்கிறது. அதேநேரம் இன்னும் பல சிக்னல்களில் மேம்பாலங்கள் இல்லை. குறிப்பாக சொல்வது என்றால் திருச்சி சாலை சிங்காநல்லூர் சந்திப்பு முக்கியமானதாகும். இங்கு நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில் வாகன நெரிசல் கடுமையாக இருக்கும். சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் தொலைதூர பேருந்துகள் மற்றும், திருச்சி சாலையில் ஒண்டிப்புதூரில் இருந்து வந்து திரும்பும் பேருந்துகள், கோவை பிளேமேடு செல்லும் வாகனங்கள், உக்கடம் செல்லும் வாகனங்கள் என நெரிசல் மிகுதியாக இருக்கும்.
இங்கு தற்போது "யூ டேர்ன்" வசதி இருந்தாலும் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்ட கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால் மெட்ரோ ரெயில் திருச்சி சாலை வழியாக போகும் என்று கூறப்பட்டதால் தாமதம் ஆனது. ஆனால் தற்போது அவினாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் தான் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருச்சி சாலையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனால் சிங்காநல்லூரில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் முடிவு செய்தது.
சிங்கநல்லூரில் ரூ.141 கோடியில், பஸ் நிலைய சந்திப்பில் இருந்து 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட திட்ட வரைவு ரெடியானது. சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றி மேம்பால பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதம் வரை 3 முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் டெண்டர் எடுக்கவில்லை.
இதனால் மேம்பால பணிகள் தொடங்கப்படவில்லை.. சிங்காநல்லூர் மேம்பாலத்துக்கான திட்ட மதிப்பீடு குறைவாக உள்ளதால் மறு மதிப்பீடு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் மேம்பாலத்தை டெண்டர் எடுக்க முன்வருவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications