கர்நாடகாவில் எனக்கு லஞ்சம் கொடுத்தாங்க.. அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது.. அண்ணாமலை ‘குட்டி ஸ்டோரி’
கோவை: கர்நாடகாவில் போலீசாக இருக்கும் போது என்னிடம் ஒரு தாத்தா லஞ்சம் கொடுத்தார் எனவும் அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. யாரும் வேண்டும் என்றே லஞ்சம் கொடுக்கவில்லை. யாரோ ஒருவர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்யாததால், அந்த வேலையை செய்யுங்கள் என்று கொடுக்க ஆரம்பித்ததால் தான் லஞ்சம் உருவாகியது எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
லஞ்சம் யாரும் வேண்டும் என்றே கொடுக்கமாட்டார்கள் என்றும், ஒருவர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்யாததால், அந்த வேலையை செய்யுங்கள் என்று கொடுக்க ஆரம்பித்ததால் தான் லஞ்சம் உருவாகியது என்றும் அண்ணாமலை கூறினார். அண்ணாமலை பேசியதாவது:-

லஞ்சம் எந்த இடத்திலும் கூட லஞ்சம் கொடுப்பதை நீங்கள் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. லஞ்சம் இல்லை என்பதை நீங்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும். நன் காவல்துறையில் இருக்கும் போது ஏசியாக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். நான் பணியில் சேர்ந்து 3 மாதங்கள் ஆகியிருக்கும். அப்போது ஒரு வயசான தாத்தா கார்கலா ஆபிசுக்கு வந்தார்.
கார்கலா என்பது கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கக் கூடிய ஒரு சின்ன ஊர். அந்த தாத்தா ஆபிசில் வெளியே உட்கார்ந்து இருந்தார். எனக்கு அப்போது கன்னடம் பேச வராது. ஆங்கிலத்திலும், தமிழிலும் தான் பேசிக்கொண்டிருந்தேன். அந்த தாத்தாவுக்கு கன்னடம் மட்டும் தான் தெரியும். அப்போது அவர் இட பிரச்சினை தொடர்பாக மனு கொண்டு வந்திருந்தார்.
அந்த மனுவை என் உதவியாளரை வைத்து படிக்குமாறு கூறினே. அப்போது மூன்றாவது பக்கத்தில் ஒரு 500 ரூபாய் நோட்டு இருந்தது. ஏன் எனக்கு லஞ்சம் கொடுக்குறீங்க என்று கேட்டேன். அதற்கு அந்த தாத்தா வேலை வேகமாக முடியும் என்பதற்காக தான் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறினார். நான் இதற்கு முன்னாடி 6 மாதங்கள் அலைந்து 6 அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். விஏஓ முதல் தாசிதார் வரை சென்றேன். ஆனால் இத யாருமே வாங்கவில்லை. இதனால் தான் நான் 500 ரூபாய் கொடுத்து உங்களிடம் கொடுத்தேன் என்று கூறினார்.
அப்போது தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. யாரும் வேண்டும் என்றே லஞ்சம் கொடுக்கவில்லை. யாரோ ஒருவர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்யாததால், அந்த வேலையை செய்யுங்கள் என்று கொடுக்க ஆரம்பித்ததால் தான் லஞ்சம் உருவாகியது. யாரும் பணத்தை தூக்கி விருப்பப்பட்டு கொடுப்பது கிடையாது. அவரை அழைத்துக்கொண்டு இடத்துக்கு சென்று பார்த்தோம். அப்போது பக்கத்தில் இருந்தவர் வேலி போட்டு இருந்தார்.
அவரிடம் நான் ஏன் இப்படி மற்றவர் இடத்தில் வேலை போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் இறங்கி வராமல், நீங்க போலீஸ். இட சம்பந்தமாக என்னிடம் ஏன் பேசுகிறீர்கள் என்று என் மீது வழக்கு தொடர்ந்தனர். மற்றவருக்கு உதவி செய்ய போய் என் மீது வழக்கு போடப்பட்டது. ஒரு 2 வருஷம் அந்த வழக்கு நடந்தது. எனவே இதையெல்லாம் தாண்டி தான் நாம் நிற்க வேண்டும்.
நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், எல்லாத்தையும் சகித்துக்கொண்டு நீங்க தாண்டி நிற்கவில்லை என்றால் இந்த நாட்டில் லஞ்சம் என்ற பேயை எப்போதுமே துரத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications