சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில் என்ன தப்பு? அது பொதுவான மொழிங்க! நாராயணன் திருப்பதி பேட்டி
கோவை: சமஸ்கிருதத்தை வளர்க்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் தவறு கிடையாது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாரயணன் திருப்பதி தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் (2013-14 முதல் 2022-23 வரை), மத்திய அரசால் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ₹2,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ₹100 கோடி மட்டுமே. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பல மடங்கு குறைவு! இந்த தகவல் பிரத்யேகமாக ஒன்இந்தியாதமிழ் இணையதளத்தில் நேற்று வெளியானது. இந்த செய்தி, மொழி ஆர்வலர்கள் மற்றும் தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் ஆர்எஸ் பாரதி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர், மத்திய அரசின் போக்கு தொடர்பாக ஒன்இந்தியா தமிழிடம் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
அதேநேரம், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சமஸ்கிருதம் என்பது எந்த மாநிலத்துக்கும் தாய்மொழி அல்ல. அனைத்து மொழிகளுக்குமான ஒரு பொதுவான மொழி. அந்தந்த மாநிலங்கள் தங்களுடைய மொழியை வளர்ப்பதற்காக அதற்கென துறை வைத்து அதன் வளர்ச்சியை மேம்படுத்துவது வழக்கம்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் கடந்த 50 ஆண்டுகளில் என்ன செலவு செய்தார்கள் என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, மத்திய அரசின் மீது இதுபோன்ற மொழி ரீதியான பேதத்தை வைப்பது மிகவும் தவறானது.
தமிழர்கள், தமிழக அரசு செய்ய வேண்டிய கடமைகளை தொடர்ந்து வேண்டுமென்றே மத்திய அரசின் மீது பழிசுமத்துவது மிகவும் மலிவான அரசியலாகும். மத்திய அரசின் மீதுள்ள வெறுப்பின் அடிப்படையிலேயே இந்த மொழி அரசியல் செய்யப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதம் எனும் பொது மொழியை மத்திய அரசு வளர்ப்பதில் எந்தவொரு தவறும் கிடையாது. தமிழ் மொழியை இங்குள்ள ஆட்சியாளர்களைத் தவிர யாராலும் அழிக்க முடியாது. கடந்த 3 வருடங்களில் திமுக அரசு தமிழர்களின் வளர்ச்சிக்கு, மொழியின் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications