முதுகுவலியால் அவதிப்படும் ஓ.பன்னீர்செல்வம்... ஆயுர்வேத மருத்துவமனையில் புத்துணர்வு சிகிச்சை..!
கோவை: கடந்த சில நாட்களாகவே முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் புத்துணர்வு சிகிச்சை பெற்று வருகிறார்.
நீராவி குளியல், மண் சிகிச்சை, ஒத்தடம் உள்ளிட்ட சிகிச்சைகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக இன்னும் ஒரு வாரத்திற்காவது ஓ.பன்னீர்செல்வம் கோவையில் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.
முதுகு வலி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீண்ட நாட்களாகவே முதுகு வலி இருந்து வருகிறது. இதற்கு ஆங்கில மருத்துவ முறை சிகிச்சையில் முழு பலன் கிடைக்காததாலும், ஆங்கில வலி மருந்துகளினால் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்ற ஐயத்தினாலும் அவர் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிவிட்டார். ஏற்கனவே கோவையில் இதற்காக பிரத்யேக சிகிச்சை பெற்று ஓரளவு முதுகுவலியிலிருந்து விடுபட்டிருக்கிறார்.
கேரள மருத்துவம்
இந்நிலையில் இப்போது அலைச்சல் அதிகரித்த காரணத்தால் மீண்டும் அவருக்கு முதுகு வலி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கோவை பீளமேட்டில் இயங்கி வரும் பிரபல ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெறத் தொடங்கியிருக்கிறார். கேரள பாரம்பரிய வைத்திய முறைப்படி அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்காவது ஓ.பி.எஸ். கோவையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உடல் பயிற்சி
இதனிடையே தனிப்பட்ட முறையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் கட்சியினர் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வரவேண்டாம் என்றும் கட்சியினரும், அன்பினரும் திரண்டால் அது ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக்கூடும் எனவும் அவர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு உடல் பயிற்சி முறைகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.
அலைச்சல் அதிகம்
மனைவி இறந்த துக்கத்திலிருந்து ஓ.பி.எஸ். இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவை தொடர்ந்து ஆறுதல் தெரிவிக்க வந்தோரை சந்திப்பதற்காக நாள்தோறும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததும், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ததும் முதுகு வலி திடீரென அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.